கோவையில் வலிப்பு வந்தது போல் சாலையில் விழுந்து நடித்துப் பணம் பறித்து வந்த ஒரு பெண்ணை கையும்களவுமாக மக்கள் பிடித்துள்ளனர். கோவையில் நடுரோட்டிலும் வீடுகளின் வாசலிலும் வலிப்பு நோய் வந்தது போல் நடித்து, இரக்கப்படும் பொதுமக்களிடம் திட்டமிட்டுப் பணம் பறித்து வந்த பெண் ஒருவரின் செயலை, அப்பகுதி மக்கள் செல்போனில் வீடியோ எடுத்து அம்பலப்படுத்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.வடிவேலு திரைப்படப் பாணியில் நடந்த இந்த ஏமாற்று வேலை கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கோவை, சிவானந்தா காலனி, ரத்தினபுரி, லட்சுமிபுரம் விஸ்வநாதபுரம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில், மர்மப் பெண் ஒருவர் திடீரென வீடுகளின் வாசலிலும் சாலையிலும் விழுந்து, கடுமையான வலிப்பு நோய் (Seizure) வந்தது போல உடலை நடுங்கச் செய்து தவிப்பதுபோல் நாடகமாடி உள்ளார்.இதைக் கண்டு பதறிப்போன அங்குள்ள வீடுகளில் இருந்த ஆண்களும், பெண்களும் மனிதாபிமான அடிப்படையில் ஓடிவந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உள்ளனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண் இயல்பு நிலைக்குத் திரும்பியது போல் நடித்ததால், "பாவம்... சொந்த ஊருக்குச் செல்லப் பணமில்லாமல் தவிக்கிறாரோ" என்று எண்ணி, அங்கு இருந்தவர்கள் தங்களது சொந்தக் பணத்தைக் கொடுத்து அவரை ஊருக்குச் செல்லுமாறு வழியனுப்பி வைத்து உள்ளனர்.பணத்தைப் பெற்றுக் கொண்டு சென்ற அந்தப் பெண்ணின் அசைவுகள் மற்றும் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர், அவருக்குத் தெரியாமல் ரகசியமாகப் பின்தொடர்ந்து சென்று தீவிரமாகக் கண்காணித்து உள்ளனர். அப்போது அடுத்த தெருவிற்குச் சென்ற அந்தப் பெண் அங்கு உள்ள மற்றொரு வீட்டின் வாசலிலும் அதேபோல வலிப்பு வந்தது போல் விழுந்து மீண்டும் நடித்துப் பணம் பறிக்க முயன்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரிடம் இதுபற்றி கேட்டபோது அவர் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார். Extorting money by feigning a seizure in coimbatore