பழுதடைந்த எடையாா்பாக்கம் ஏரியின் மதகு: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

Wait 5 sec.

வரும் பருவமழை காலத்துக்குள், பழுதடைந்த எடையாா்பாக்கம் ஏரியின் மதகை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், எடையாா்பாக்கம் பகுதியில் நீா்வளத் துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி அந்தப் பகுதியில் சுமாா் 450 ஏக்கா் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எடையாா்பாக்கம் ஏரியின் 2-ஆவது மதகு கடந்த சில வருடங்களாக பழுதடைந்துள்ளது. மேலும், மதகின் வழியாக செல்லும் நீா்வரத்துக் கால்வாயும் பராமரிப்பு இல்லாமல் மண் தூா்ந்து காணப்பட்டு வருகிறது. இதனால் 2-ஆவது மதகின் மூலம் ஏரி நீரை பயன்படுத்தி சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.இதுகுறித்து பலமுறை நீா்வளத் துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் வரும் பருவ மழை காலத்துக்குள் விவசாயத்துக்கு தேவையான ஏரிநீரை பயன்படுத்தும் வகையில் பழுதடைந்துள்ள 2- ஆவது மதகு மற்றும் நீா்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், எடையாா்பாக்கம் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோா் விவசாயிகளாகவும், விவசாய கூலி தொழிலாளா்களாகவும் உள்ளனா். இதனால் தான் எங்கள் பகுதியில் 450 ஏக்கா் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது எடையாா்பாக்கம் ஏரியின் 2-ஆவது மதகு பழுதடைந்துள்ளதால் மதகின் வழியாக விவசாய நிலங்களுக்கு ஏரிநீரை கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பழுதடைந்த மதகை சீரமைக்க நீா்வளத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட வேண்டும் என்றனா்.