பிகாரில் இடைத்தேர்தல் நடைபெற்ற பங்கிப்பூர் தொகுதியில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.31 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக இருந்த பங்கிப்பூரில் பாஜக வேட்பாளர் நீரஜ் குமாரை தோற்கடித்து வரலாற்று வெற்றியை பிரசாந்த் கிஷோர் பதிவு செய்துள்ளார். பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் மாநிலங்களவை உறுப்பினராக ஆவதற்கு தனது பங்கிப்பூர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். அதன் விளைவாக அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு கடந்த ஜூலை 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பங்கிப்பூருடன் குஜராத்தின் மஞ்சள்பூர், மத்திய பிரதேசத்தின் ததியா தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் பங்கிப்பூர் தொகுதியில் ஆரம்பம் முதலே பிரசாந்த் கிஷோர் முன்னிலை பெற்றுவந்தார். நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர், 31 ஆண்டுகளாக பாஜவின் கோட்டையாக இருந்த தொகுதியில் தனது வெற்றியைத் தொடங்கியுள்ளார். மொத்தமுள்ள 31 சுற்றுகளில் 24 -வது சுற்று முடிவில் பாஜக வேட்பாளர் நீரஜ் குமாரைவிட 13,868 வாக்குகள் வித்தியாசத்தில் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். தற்போது தேர்தல் ஆணையத்தில் இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, 64151 வாக்குகள் பெற்று பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றார். பாஜக சார்பில் போட்டியிட்ட நீரஜ் குமார் 44827 வாக்குகளை மட்டுமே பெற்றார். இதேபோன்று குஜராத்தின் மஞ்சள்பூர் தொகுதியில் பாஜகவின் சத்யேந்திரபாய் படேல், மத்திய பிரதேசத்தின் ததியா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கன்ஷியாம் சிங் ஆகியோர் வெற்றி பெற்றனர். எனது வெற்றி பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்Prashant Kishor achieves a historic victory in Bankipur with 64,000 votes