பென்னாகரம்: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி திங்கள்கிழமை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் புனித நீராடுவதற்காக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில், நீர்வரத்து குறைவினால் ஆற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் முதலைகள் சுற்றித் திரிவதால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.கடந்த சில நாள்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து சரிந்ததால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆங்காங்கே சிறிய அளவிலான நீர் குட்டைகள் தோன்றியும், ஒரு சில இடங்களில் நீரோடைகள் போல் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கேரளம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பருவ மழையினால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் உபரி நீரின் வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணைக்கு வரும் நீர் வரத்தை பொறுத்து காவிரி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கபினி அணையிலிருந்து முதற்கட்டமாக 10,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அதன் பின்பு வினாடிக்கு 25,000 கனஅடியாக அதிகரித்து, பிறகு 9000 கனஅடியாக குறைக்கப்பட்டது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இதுவரை வரை தமிழகம் வந்தடையவில்லை. தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்து திங்கள்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 300 கன அடியாக குறைந்துள்ளது.இந்த நிலையில் ஆடிப்பெருக்கு விழா நாளான திங்கள்கிழமை காவிரி ஆற்றில் புனித நீராடுவதற்காக தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அதிகயளவில் மக்கள் வந்திருந்தனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் ஆற்றில் உள்ள சிறிய நீர் குட்டைகளில் குளிப்பதற்காக ஆங்காங்கே சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அப்போது, நீர் குட்டைகளில் இருந்து வெளியேறிய முதலைகள், ஆற்றில் சுற்றித் திரிவதை கண்ட சுற்றுலாப் பயணிகள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகின்றனர். ஆபத்தை உணராமல் சிலர் பாறைகளின் மீது ஏறி முதலைகளை புகைப்படம் எடுக்கின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் புனித நீராட வரும் சுற்றுலாப் பயணிகளை, நிர்வாகம் அனுமதித்துள்ள இடங்களில் குளிக்க அனுமதித்தும், தடை செய்யப்பட்ட இடங்களில் உள்ள நீர் குட்டைகளில் குளிப்பதை தவிர்க்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும், காவிரி ஆற்றில் சுற்றி தெரியும் முதலைகளை வனத்துறையினை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Crocodiles roaming the Cauvery River: Tourists alarmedநீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா!