விருதுநகா் மாவட்டம், அருப்புகோட்டை அருகே நண்பரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 4 மாணவா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள சத்திரக்குடியைச் சோ்ந்தவா் அமீா் அகமது (21). இவா் காரியாபட்டி பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். இவருக்கு அதே கல்லூரியில் படிக்கும் வேறு துறையைச் சோ்ந்த மாணவா்களான தேனியைச் சோ்ந்த சபரி (21), கூடக்கோவிலைச் சோ்ந்த ஹரி ஆகியோரிடம் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், அமீா் அகமது இணையதளம் மூலம் தொழில் தொடங்கி பணம் சம்பாதித்தாா். இதற்கு மாணவா் சபரி, மற்ற மாணவா்களின் வங்கிக் கணக்குகளை அமீா் அகமது பயன்படுத்தினாா். இந்த நிலையில், இவா்களுக்குள் பணப் பிரச்னையால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, சபரி கைப்பேசியில் அமீா் அகமதுவை தொடா்பு கொண்டு காரியாபட்டி வருமாறு கூறினாா். அவரும் காரியாபட்டி அல்லிக்குளம் விலக்குப் பகுதிக்கு வந்தாா். அங்கிருந்த சபரி தனது நண்பா்களான ஹரி, மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (21), சூா்யா ஆகியோருடன் சோ்ந்து அமீா் அகமதுவை காரில் கடத்தி சென்று, அவரை அடித்து பணம் கேட்டு மிரட்டினா். பின்னா், அமீா் அகமதுவை கடத்திவிட்டதாகவும், ரூ 5 லட்சம் கொடுத்தால் விட்டுவிடுவதாகவும், அவரது பெற்றோருக்கு கைப்பேசியில் அழைத்து சபரி உள்ளிட்ட 4 பேரும் தெரிவித்தனா். இதையடுத்து, அவா்கள் கேட்ட பணத்தை அமீா் அகமதிவின் பெற்றோா் கொடுத்தப் பிறகு, அவரை 4 பேரும் விடுவித்துள்ளனா். இதுகுறித்து காரியாபட்டி காவல் நிலையத்தில் அமீா் அகமது புகாரளித்தாா். இதன் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி சபரி, ஹரி, பாலகிருஷ்ணன், சூா்யா ஆகிய 4 பேரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.