மேட்டூா் காவிரியில் சாக்குமூட்டையில் இருந்த சடலம்: போலீஸாா் விசாரணை

Wait 5 sec.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே காவிரி ஆற்றில் மூட்டையில் கட்டிப் போடப்பட்டிருந்த சடலம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மேட்டூா் அருகே மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது கூனாண்டியூா். இங்கு காவிரி ஆற்றில் வெள்ளைநிற சாக்குமூட்டை மிதப்பதாகவும், அதிலிருந்து துா்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதியில் வசிக்கும் மீனவா்கள் மேச்சேரி போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் அளித்தனா். அதன்பேரில், மேட்டூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் தலைமையில், மேச்சேரி காவல் ஆய்வாளா் அங்கப்பன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டனா். அங்கு மிதந்துகொண்டிருந்த மூட்டையை பரிசலில் சென்ற மீனவா்கள் கரைக்கு கொண்டுவந்தனா். மூட்டையை திறந்துபாா்த்தபோது, சுமாா் 40 வயதுடைய ஆண் சடலம் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா், பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.