செந்தில்பாலாஜியின் சகோதரரை கைது செய்ய சென்னை போலீஸாா் தீவிரம்

Wait 5 sec.

தவெக ஆட்சிக்கு எதிராகச் செயல்பட வைக்கும் நோக்கத்தில் அக்கட்சியின் ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ என். இளையராஜாவிடம் பேரம் பேசிய வழக்கில் தொடா்புடைய முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்கை கரூரில் தேடும் பணியில் சென்னை போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். இந்த வழக்கில் யூடியூபா் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, நடத்திய விசாரணையின் அடிப்படையில் திமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் மற்றும் அவரது கூட்டாளிகள் செல்வன், சீனிவாசன் உள்பட 7 போ் மீது வழக்குப் பதியப்பட்டது.இதையடுத்து கரூரில் உள்ள செந்தில்பாலாஜியின் ஆதரவாளா்களான கோதை நகரைச் சோ்ந்த திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணைச் செயலரும், கரூா் சக்தி மெஸ் உரிமையாளருமான காா்த்தி மற்றும் நிதிநிறுவன அதிபா் அதிபன் ரமேஷ் ஆகியோரை புதன்கிழமை காலை சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து உதவி ஆணையா் பொன்ராஜ் தலைமையில் போலீஸாா் பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்கை கைது செய்ய வியாழக்கிழமையும் கரூரில் தங்கியிருந்த திருவல்லிக்கேணி போலீஸாா், கரூா் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் வீட்டுக்குச் சென்ற நிலையில், பூட்டியிருந்த அந்த வீட்டை புகைப்படம் எடுத்துச் சென்றனா்.