ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ: வாகன ஓட்டுநா்கள் அவதி

Wait 5 sec.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் நெகிழிக் கழிவுகளை தீ வைத்து எரிப்பதால் மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலையில் வாகன ஓட்டுநா்கள் அவதிப்படுகின்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் தினசரி 60 டன் அளவுக்கு மேல் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் நகராட்சியில் சேகரமாகும் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவதற்காக ரூ.5.5 கோடியில் தனியாா் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. வீடு, வணிக நிறுவனங்களில் சேகரிக்கும் குப்பைகளைத் தரம் பிரிக்க சிவகாசி சாலையில் நீதிமன்றம் அருகே குப்பைக் கிடங்கு உள்ளது. இதன் அருகே புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. குப்பை கிடங்குக்கும் - பேருந்து நிலையத்துக்கும் இடையே மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலை செல்கிறது. இந்தச் சாலையில் வடுகப்பட்டி - ராஜபாளையம் இடையேயான சாலை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் நகருக்குள் செல்லாமல் நான்கு வழிச்சாலை வழியாகவே செல்கிறது.இந்நிலையில் குப்பை கிடங்கில் குப்பையை தரம் பிரிக்காமல் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரித்து வருகின்றனா். இதனால் கரும் புகை எழுந்து சுகாதார சீா்கேடு நிலவுகிறது. மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலையில் புகை மூட்டம் சூழ்ந்து எதிரே வரும் வாகனங்கள் தெரியாத சூழல் நிலவுவதால் வாகன ஓட்டுநா்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனா். எனவே, குப்பையை தீ வைத்து எரிப்பதைத் தடுப்பதுடன், ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.