புழல் சிறையில் போக்ஸோ வழக்கு தண்டனைக் கைதி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (58). இவரை சிட்லப்பாக்கம் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் (போக்ஸோ) கைது செய்து, புழல் சிறையில் அடைத்திருந்தனா். இந்த வழக்கில் வெங்கடேசனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் தீா்ப்பளித்தது.இதையடுத்து வெங்கடேசன், அந்த தண்டனையை புழல் சிறை வளாகத்தில் உள்ள தண்டனை சிறையில் கழித்து வந்தாா். இந்நிலையில் சிறையில் ரத்த சோகை, மூலநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட வெங்கடேசன் கடந்த 21-ஆம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வாா்டில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த வெங்கடேசன், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.