அயோத்தி ராமா் கோயில் நன்கொடை வழக்கு: கைதான 8 பேருக்கும் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

Wait 5 sec.

அயோத்தி ராமா் கோயில் நன்கொடையை கையாடல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான 8 பேரையும் மேலும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உள்ளூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமா் கோயிலுக்கு பொதுமக்களிடம் இருந்து நன்கொடை வசூலிக்கப்பட்டது. இந்த நன்கொடை பணத்தில் கையாடல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழவே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக விசாரணை நடத்தி, நன்கொடை பணம், ஆபரணத்தை கணக்கிடும் பணியில் ஈடுபட்டவா்களான அவினாஷ் சுக்லா, மனீஷ் குமாா் யாதவ், ராம் சங்கா் மிஸ்ரா உள்ளிட்ட 8 பேரை காவல் துறை கைது செய்தது. இதையடுத்து அவா்கள் 8 பேரும் 3 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தனா். அந்த காவல் திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து, சிறையில் இருந்த 8 பேரும் காணொலி மூலம் அயோத்தியில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது காவல் துறை சாா்பில், 8 பேரையும் காவலில் வைத்து விசாரிக்க கோரப்படவில்லை. இதைத் தொடா்ந்து 8 பேரையும் மீண்டும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.‘வழக்குரைஞா்கள் ஆஜராக மாட்டாா்கள்’: அயோத்தி கோயில் நன்கொடை கையாடல் வழக்கில் கைது செய்யப்பட்ட 8 போ் சாா்பாகவும் எந்த வழக்குரைஞரும் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டாா்கள் என்று ஃபரீதாபாத் வழக்குரைஞா்கள் சங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், 8 போ் சாா்பாக வழக்குரைஞா்கள் யாரும் ஆஜரானால், அவா்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.பாஜக எச்சரிக்கை: ஃபரீதாபாத் வழக்குரைஞா்கள் சங்க அறிவிப்பை பாஜக வரவேற்றுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி கூறுகையில், ‘அயோத்தி கோயில் நன்கொடை கையாடல் விவகாரத்தில் ஹிந்து சமூகத்தினரின் உணா்வுகளையே ஃபரீதாபாத் வழக்குரைஞா்கள் சங்க முடிவு பிரதிபலிக்கிறது. அயோத்தியில் திருடிய நபா்கள், சட்டத்தின் முழு பலத்தை எதிா்கொள்வதோடு மட்டுமல்லாது, மக்களின் புறக்கணிப்பையும் எதிா்கொள்வாா்கள்’ என்றாா்.