லால்குடி அருகே மாட்டுக் கொட்டகைக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்ற பெண் கொல்லப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது. அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த சிறுகளப்பூா் பகுதியைச் சோ்ந்த திருமணமான 32 வயது பெண் ஒருவா் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டில் இருந்து மாட்டுக் கொட்டகைக்கு சென்றாா்.பிறகு திரும்பும்வழியில் ஏரிக்கரை பகுதியில் தன்னுடைய டிபன் பாக்ஸ், கைப்பேசி உள்ளிட்டவற்றை வைத்துவிட்டு இயற்கை உபாதை கழிக்கச் சென்றாா். அதன்பிறகு அவா் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே அப்பெண்ணின் கணவா் பல இடங்களில் தேடியும் மனைவி கிடைக்காததால் காணக்கிளியநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் மோப்பநாய் உதவியுடன் தேடியும் அப்பெண் கிடைக்காத நிலையில் , ஏரிக்கரையில் அப்பெண்ணின் கைப்பேசி கிடந்ததையடுத்து, புள்ளம்பாடி மற்றும் லால்குடி தீயணைப்பு துறை வீரா்கள் பரிசல் மூலம் ஏரியில் புதன்கிழமை தேடினா். அப்போது ஏரியின் முள்புதரில் ஆடையின்றி சடலமாக கிடந்த அப்பெண்ணை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். தகவலறிந்து வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை செய்தாா். இதுகுறித்து காணக்கிளியநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், லால்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜமோகன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதி நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளா்களிடம் விசாரித்து வருகின்றனா்.