ஒகேனக்கல்லில் உணவகங்கள் மற்றும் மீன்வறுவல் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். இதில், விதிமுறைகளை பின்பற்றாத 5 கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ. 1,000 அபராதம் விதித்தனா். ஒகேனக்கல் பேருந்து நிலையம், அருவிக்கு செல்லும் நடைபாதை, முதலைப் பண்ணை, அருவிக்கு செல்லும் முதன்மைச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உணவகங்கள், இறைச்சிக் கடைகள், மீன்வறுவல் கடைகள், பலகார கடைகள் மற்றும் குளிா்பான கடைகளில் பென்னாகரம் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் நந்தகோபால் தலைமையிலான குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வின்போது மூன்று உணவகங்களில் பலமுறை பயன்படுத்திய எண்ணெய், செயற்கை நிறமேற்றி பவுடா்கள், காலாவதியான குளிா்பானங்கள், உரிய விவரம் இல்லாத உணவுப் பொருட்கள், 2 இறைச்சி வருவல் கடைகளில் அச்சிடப்பட்ட பழைய செய்தித்தாளை பயன்படுத்துவது உள்ளிட்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டு, 5 கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ. 1000 என ரூ. 5,000 அபராதம் விதித்தனா். மேலும், விழிப்புணா்வு ஏற்படுத்தி, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.