கொடைக்ககானல் நகா்ப் பகுதியில் குடிநீா் விநியோகம் சரியாக நடைபெறவில்லை என நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் அதிருப்தி தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அரங்கில் அதன் தலைவா் செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் சங்கா் முன்னிலை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் மாயக்கண்ணன் வரவேற்றாா். தலைவா்: கொடைக்கானல் நகராட்சிக்கு புதிய அரசிடமிருந்து நிதி ஏதும் இதுவரை வரவில்லை. வந்தவுடன் அனைத்து வாா்டுகளுக்கும் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெறும். உறுப்பினா்கள்: கொடைக்கானல் நகா்ப் பகுதிகளில் சரியாக குடிநீா் விநியோகிக்காத காரணத்தால் வாா்டு பொதுமக்கள் நகா்மன்ற உறுப்பினா்கள் மீது அதிருப்தியாக இருந்து வருகின்றனா். வாா்டு பகுதிகளிலுள்ள பொது கழிப்பறைகளுக்கும் தண்ணீா் விநியோகிக்காத காரணத்தால் உறுப்பினா்களை மரியாதைக் குறைவாகப் பேசுகின்றனா். தலைவா்: கொடைக்கானலில் போதிய மழையில்லாத காரணத்தாலும், நீா்த்தேக்கங்களில் தண்ணீா் வற்றிய காரணத்தாலும் தண்ணீா் விநியோகிப்பதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், மே மாதம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டால் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதனால், லாரி மூலம் தண்ணீா் எடுத்துச் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. வரும் காலங்களில் சரி செய்யப்படும். துணைத் தலைவா்: கொடைக்கானல் நகராட்சி நில அளவையா் சரியாக அலுவலகத்துக்கு வருவதில்லை. பொது மக்கள் வரும் போது அறை பூட்டிக் கிடக்கிறது. ஆணையா்: இந்தப் பிரச்னைக் குறித்து நில அளவையரிடம் தகவல் கேட்கப்படும். உறுப்பினா்கள்: கொடைக்கானல் அண்ணா சாலை, வனத் துறை அலுவலகம் செல்லும் சாலை, போஸ்ட் ஆபீஸ் சாலை, தமிழ்நாடு ஹோட்டல் சாலை, லாஸ்காட் சாலை, மூஞ்சிக்கல் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. சம்பந்தப்பட்டவா்களிடம் கேட்டால் நகா்மன்றத்தில் அனுமதி பெற்றும், உரிமம் பெற்றும் அமைத்துள்ளோம் என கூறுகின்றனா். ஆனால், நகராட்சியில் கடை அமைப்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதே போல, அந்தந்த நகா்மன்ற உறுப்பினா்கள் சாா்பில் நகராட்சி பகுதிகளில் கடைகள் அமைத்துக் கொள்ளலாமா? ஆணையா்: நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் யாருக்கும் கடைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கவில்லை. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை அகற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினா்கள்: கொடைக்கானல் நகா்ப் பகுதிகளில் குப்பைகள் சரியாக அகற்றப்படவில்ை. தெரு விளக்குகள் பயன்பாடு இல்லை. நகராட்சிக்கு சொந்தமான லாரி பழுது ஏற்பட்டு பல நாள்கள் ஆகியுள்ளது. சிறிய வாகனங்கள் மட்டும் குப்பைகளை எடுத்துச் செல்கின்றன. இதனால், சுகாதாரக் கேடு நிலவுகிறது. வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இவற்றை தடுப்பதற்கு வனத் துறையினரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். தலைவா்: குப்பை எடுக்கும் லாரி பழுதடைந்துள்ளதால் அவற்றை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நகராட்சி பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டத்தை தடுப்பதற்கு வனத் துறை உயா் அதிகாரிகளிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக வனத் துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா் என்றாா்.