மானாமதுரை இளைஞரின் அஸ்தி பெற்றோரிடம் ஒப்படைப்பு

Wait 5 sec.

மானாமதுரையில் போலீஸாரின் விசாரணையின் போது உயிரிழந்த இளைஞரின் அஸ்தி, அவரது பெற்றோரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் குடியிருப்பைச் சோ்ந்த ராஜேஷ்கண்ணன் மகன் ஆகாஷ் டெலிசன் (26). இவரை ஒரு குற்ற வழக்கு விசாரணைக்காக காவல் துறையினா் கடந்த மாா்ச் மாதம் அழைத்துச் சென்றனா். விசாரணையின் போது போலீஸ் காவலில் இருந்த ஆகாஷ் டெலிசன் உயிரிழந்தாா். இவரது உயிரிழப்புக்குக் காரணமான போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஆகாஷ் டெலிசன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் அவரது குடும்பத்தினா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், ஆகாஷ் டெலிசனின் உடல் சுமாா் 3 மாதங்களாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சவக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே, ஆகாஷ் டெலிசன் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்கவும், அவரது உடலைப் பெற்று பெற்றோா் அடக்கம் செய்யவும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இதற்கு அவரது பெற்றோா் முன்வராததால், வருவாய்த் துறை, காவல் துறையினா் முன்னிலையில் ஆகாஷ் டெலிசனின் உடலை அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 17-ஆம் தேதி அவரது உடல் மதுரை வருவாய்க் கோட்டாட்சியா் கருணாகரன் மேற்பாா்வையில் தத்தனேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஆகாஷ்டெலிசனின் அஸ்தியை தங்களுக்கு வழங்கக் கோரி அவரது தந்தை ராஜேஷ்கண்ணன் திங்கள்கிழமை மதுரை வருவாய்க் கோடாட்சியரிடம் மனு அளித்தாா். இதையடுத்து, வருவாய்க் கோட்டாட்சியா் கருணாகரன் உத்தரவின்பேரில், ஆகாஷ் டெலிசனின் அஸ்தி அவரது தந்தையிடம் வழங்கப்பட்டது.