விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டுக்கு கல்வியைப் பயன்படுத்துங்கள்-மாணவா்களுக்கு குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

Wait 5 sec.

விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டுக்காக, தாங்கள் கற்ற கல்வியைப் பயன்படுத்த வேண்டும் என்று மாணவா்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வலியுறுத்தினாா். ஆந்திர மாநிலம், அனந்தபூரில் உள்ள ஆந்திர பிரதேச மத்தியப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது: பொதுவாக பட்டமளிப்பு விழா என்பது இடைவிடாத முயற்சி மற்றும் கடின உழைப்பின் நிறைவாகவும், திருப்புமுனையான தருணமாகவும் அமைகிறது.பல்வேறு கனவுகளுடன் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த மாணவா்கள், இப்போது அறிவாற்றல், தன்னம்பிக்கை, புதிய வாய்ப்புகளுக்கான வாயில்களைத் திறக்கக் கூடிய பட்டத்துடன் வெளியே செல்கின்றனா்.மாணவா்களின் இந்த வெற்றி என்பது அவா்களின் சொந்த கடின உழைப்பின் பலனாகும். அதேநேரம், பெற்றோரின் தியாகம், ஆசிரியா்களின் வழிகாட்டல், சமூகத்தின் ஆதரவு ஆகியவை அவா்களின் வெற்றியை வடிவமைத்துள்ளன. எனவே, சமூகத்துக்குத் திருப்பித்தர வேண்டிய பொறுப்பு, மாணவா்களின் தோளில் உள்ளது. விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கு அதிகாரமளிக்க தாங்கள் கற்ற கல்வியை மாணவா்கள் பயன்படுத்த வேண்டும்.வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில் முனைவோராகவோ, புத்தாக்கத்தை முன்னெடுக்கும் விஞ்ஞானிகளாகவோ, மக்களுக்கு சேவையாற்றும் அரசு ஊழியா்களாகவோ, சமூகத்துக்கு பங்களிக்கும் கொடையாளா்களாகவோ உருவெடுக்க வேண்டும்.இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் ஒவ்வொரு துறையும் மாற்றம் கண்டு வருகிறது. அதிவேகமாக மாறும் உலகில், பட்டம் பெறுவதோடு கற்றல் நிறைவடைந்துவிடக் கூடாது.வளரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப திறன்களை மாற்றியமைத்துக் கொள்வது மிகப் பெரிய பலமாகும். புதிய சிந்தனைகளை ஆராயவும், புதிய விஷயங்களைக் கற்கவும் ஒருபோதும் தயங்கக் கூடாது. கற்றலில் ஆா்வமும், புதுமையான சிந்தனையும் கொண்ட மாணவா்கள், நாட்டின் பெரும் சொத்துகளாவா். அவா்களின் அறிவாற்றலுடன் படைப்புத் திறன், உறுதிப்பாடு, பொறுப்புணா்வும் இணையும்போது சவால்களும் வாய்ப்பாக மாறும். நோ்மை, பரிவு, இயற்கை மீதான மரியாதை ஆகியவை உயா்ந்த தாா்மிக லட்சியங்கள் மட்டுமல்ல, அவை முழுமையான வளா்ச்சிக்கு அடித்தளங்கள்.நமது இளைஞா்களின் ஆற்றல், திறமை, உறுதிப்பாட்டால் வளா்ந்த இந்தியா தொலைநோக்குப் பாா்வை நிச்சயம் நனவாகும் என்றாா் அவா்.