ரூ. 40 - 50 கோடி கொடுத்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்கு ஸ்டாலினுக்கு கொஞ்சம்கூட வெட்கமாக இல்லையா? என அமைச்சர் நிர்மல்குமார் கடுமையாக விமர்சித்தார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "நாங்கள் யாரிடமும் குதிரை பேரம் செய்யவில்லை. ஆதாரம் இருந்தால் கொடுக்கச் சொல்லுங்கள். அவர்கள் கட்சியினர் மாட்டிக்கொண்டார்கள் என்று தெரிந்ததும் ஆளுநருக்கு கடிதம் கொடுக்கிறார்கள். திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்கிறோம் என்று சொன்னால் யாராவது உடன் இருப்பார்களா? எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கத்தான் திமுகவினர் உழைத்தார்களா? இந்த மாதிரி கேவலமான ப்ரோபசல் ஸ்டாலின் செய்யலாமா? செய்ததால்தான் கட்சியினர் வெளியேறுகின்றனர். திமுக, அதிமுகவில் யாருக்காவது அரசியல் எதிர்காலம் இருக்கிறதா? அடுத்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டால் வெற்றி பெறுவார் என்று ஒருவரை சொல்லுங்கள் பார்க்கலாம். அரசியல் எதிர்காலம் இல்லாதவர்கள்தான் எங்கள் கட்சிக்கு வருகிறார்கள். உதயநிதிக்கு அரசியல் பயிற்சி கொடுத்தார்கள். வேலைக்கு ஆகவில்லை. அவர் துபாய் சென்று ஒரு வாரம் ஆகிவிட்டது. உதயநிதிக்கு பயிற்சி கொடுக்கும் வேலையைப் பாருங்கள். அதிமுக - பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டும் என்று எப்போது முடிவு எடுத்தார்களோ அப்போதே திமுகவின் அத்தியாயம் முடிந்துவிட்டது. இனிமேல் வேறு ஏதாவது வேலை இருந்தால் பாருங்கள். குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க திமுகவும் அதிமுகவும் 40 நாள்களாக முயற்சி செய்து வருகிறது. ஆட்சியை கவிழ்க்க தவெக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க ரூ. 50 கோடி வரை பேரம் பேசி வருகிறார்கள். ரூ. 35 கோடிக்கு பேரம் பேசியது ஆதாரத்துடன் காவல்துறைக்கு வந்ததால் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். ரூ. 40 - 50 கோடி கொடுத்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்கு ஸ்டாலினுக்கு கொஞ்சம்கூட வெட்கமாக இல்லையா?மு.க. ஸ்டாலின், உதயநிதியின் உத்தரவின்பேரில் செந்தில் பாலாஜி போன்ற ஆள்கள் ஒவ்வொரு நாளும் எங்கள் எம்.எல்.ஏக்களை தொடர்பு கொண்டு பல கோடிகளைத் தருவதாக பேசுகின்றனர். தேர்தலில் மக்கள் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள், உங்களின் செயலைப் பார்த்து கூட்டணி கட்சிகள் வெளியேறிவிட்டன. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க முயற்சி செய்துவிட்டு அதையும் செய்ய முடியாமல் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறார். எம்எல்ஏக்களை வாங்க முயற்சிப்பதால்தான் 30 நாள்களில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடுமென மு.க. ஸ்டாலின் சொல்கிறார். அதேபோல கோடிக்கணக்கில் செலவு செய்து எங்கள் எம்எல்ஏக்கள் வெற்றி பெறவில்லை. தேர்தலுக்காக ரூ. 3 - 4 லட்சம் மட்டுமே செலவு செய்துள்ளனர். அதனால் எப்போது தேர்தல் வந்தாலும் சந்திப்போம். மக்கள் எங்களுக்கு நம்பிக்கையுடன் வாக்களித்திருக்கிறார்கள். நாங்கள் ஓட்டுக்கு ரூ. 2,000 கொடுத்து வெற்றி பெறவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்தீர்கள் என உணர்ந்து மக்களிடம் மன்னிப்பு கேட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிவிட வேண்டும். மக்களின் தீர்ப்புக்குப் பிறகாவது திருந்த வேண்டும்" என்று பேசினார்.Minister Nirmal Kumar levels serious allegations against the DMK regarding horse-tradingதவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம்! செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது!