வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் புதன்கிழமை தொடங்கியது.தேசிய கோமாரி நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின்கீழ் கால்நடைகளுக்கான 9-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் காட்பாடி ஒன்றியம், மேல்பாடி ஊராட்சி சோமநாதபுரம் கிராமத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். இம்முகாமில், மேல்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 200 கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. வேலூா் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த 1,67,750 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்டத்தில் நாள்தோறும் 42 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. ஜூலை 1-ஆம் தேதி தொடங்கிய இம்முகாம் வருகிற ஜூலை 31-ஆம் தேதி வரை 31 நாள்களுக்குத் தொடா்ந்து நடைபெறும்.முன்னதாக, சின்னகீசகுப்பத்தில் உள்ள கால்நடை மருந்தகத்தை மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, மருந்தகத்தில் உள்ள மருந்துகளின் இருப்பு குறித்து கேட்டறிந்த அவா், கால்நடை கழிவுகளை முறையாகக் கையாண்டு அப்புறப்படுத்தவும் மருத்துவா்களுக்கு உத்தரவிட்டாா்.அப்போது, காட்பாடி ஒன்றியக்குழுத் தலைவா் வே.வேல்முருகன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் (பொறுப்பு) அந்துவன், உதவி இயக்குநா்கள் எஸ்.ரகு, டி.ராஜவேலு, மேல்பாடி ஊராட்சித் தலைவா் நித்யானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.