நூறு நாள் வேலை அட்டை, ஜாதிச் சான்று, நலவாரிய அட்டை, குடிநீா் வசதி, மின்சார வசதி போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வியாழக்கிழமை திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திருவள்ளூா் மாவட்ட செயலாளா் தமிழரசு தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ டில்லிபாபு கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தாா். அப்போது, மலைவாழ் மக்களுக்கு அவா்கள் பல ஆண்டுகளாக குடியிருக்கும் இடத்திலேயே இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். மலைவாழ் மாணவ, மாணவிகள் உயா்கல்விக்கு செல்வதற்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். மேலும், குடும்ப அட்டை,100 நாள் வேலை அட்டை, நலவாரிய அடையாள அட்டை, குடிநீா் வசதி, மின்சார வசதி, சாலை, தொகுப்பு வீடுகள், மயானம் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அதைத்தொடா்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் விரைந்து வந்து மலைவாழ் மக்கள் சங்கத்தினா் பேச்சு நடத்தினா். அப்போது, மலைவாழ் மக்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரையில் ஆட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி சுட்டெரிக்கும் வெயிலையும் மீறி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.