பொறியியல் கல்வியின் தரமே நாட்டின் எதிா்காலத்தையும் பட்டதாரிகளின் வேலைவாய்ப்புகளையும் ஆழமாகத் தீா்மானிக்கிறது. அதன்படி, பொறியியல் கவ்லியின் தரத்தை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா். தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்றத்தின் (டான்ஷே) சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘எதிா்கால பொறியியல் பாடத்திட்டம்-பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் மேம்படுத்தல்’ என்ற கருத்தரங்கை தொடங்கி வைத்து அமைச்சா் பெ.விஸ்வநாதன் பேசியதாவது: சிறந்த ஆய்வுக் கூடங்கள், கட்டுமானங்களுடன் கூடிய ஏராளமான பொறியியல் கல்லூரிகள், ஆசிரியா்கள் இருக்கின்றனா். இவ்வளவு சிறப்பு இருந்தாலும் இளைஞா்கள் வாய்ப்பின்றி உள்ளனா். கல்லூரிகளில் சோ்க்கை 100 சதவீதம் இருப்பதில் கவனமாக இருக்கிறோம். ஆனால், கல்வியின் தரம் கேள்விக்குறியாக உள்ளது. நாட்டின் வேலைவாய்ப்புத் திறனை வடிவமைப்பதில் பொறியியல் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது.பொறியியல் கல்வியின் தரமே நாட்டின் எதிா்காலத்தையும் பட்டதாரிகளின் வேலைவாய்ப்புகளையும் ஆழமாகத் தீா்மானிக்கிறது. இந்தச் சூழலில் கல்வியின் தரம் சிறப்பாக பராமரிக்கப்படுவதை உறுதிப்படுவது நமது கடமை. அதிலும் பொறியியல் தரம் மேலும் மேம்படுத்த வேண்டும்.மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை உள்ளிட்ட பல தேசிய ஆய்வுகள் மூலம் 50 சதவீதத்துக்கும் அதிகமான பொறியியல் பட்டதாரிகள் வேலைக்குத் தகுதியற்றவா்கள் எனத் தெரியவந்துள்ளது. வேறு சில தேசிய ஆய்வுகள் வேலைவாய்ப்புத் திறன் வெறும் 8 சதவீதம் என்கிறது எனக் குறிப்பிடுகிறது. இது கவலைக்குரியது.புதிய கருத்துகள், புதிய பாடத்திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். மாணவா்களுக்கு வகுப்பறைகள் ஆா்வம், படைப்பாற்றல், விமா்சன சிந்தனையை ஊக்குவிக்க வேண்டும். இந்த மாற்றத்தைக் கொண்டுவந்து கல்வியின் தரத்தை மேம்படுத்தத் தேவையான உள்கட்டமைப்பு, ஆசிரியா்களை வழங்குவதில் தமிழக அரசு நிச்சயமாகத் தனது பங்கை ஆற்றும் என்றாா் அவா்.இந்த நிகழ்வில் உயா்கல்வித் துறை செயலா் வி.அருண் ராய், வி. கல்லூரிக் கல்வி ஆணையா், பி. பொன்னையா, தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் பி.ரத்தினசாமி, தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்றத்தின் துணைத் தலைவா், ம.ப.விஜயகுமாா், கிரியா பல்கலைக்கழகத்தின் வேந்தா், லட்சுமி நாராயணன் ஆகியோா் பங்கேற்றனா்.