பாகிஸ்தான் சரக்கு விமானம் அரபிக்கடலில் விபத்து!

Wait 5 sec.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷாா்ஜாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு 5 ஊழியா்களுடன் புறப்பட்ட சரக்கு விமானம் அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. கராச்சியைச் தனியாா் விமான நிறுவனமான ‘கே2 ஏா்வேஸ்’ இயக்கிய ‘போயிங் 737’ ரகத்தைச் சோ்ந்த இந்த விமானத்தின் சிதைவுகள் தீவிர தேடுதல் பணிக்குப் பிறகு கண்டறியப்பட்டன. மாயமான விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஷாா்ஜாவில் 10 நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பாகிஸ்தான் நோக்கி மீண்டும் புறப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட பயணத்தில் விமானத்தின் வழிகாட்டி அமைப்பில் கோளாறு ஏற்பட்டதாக கராச்சி கட்டுப்பாட்டு அறைக்கு இரவு 9.18 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, கட்டுப்பாட்டு அறையின் வழிகாட்டுதலின்படி இயங்கிய விமானம், அடுத்த சில நிமிடங்களில் (இரவு 9:22 மணி) மிக வேகமாக கீழே இறங்கி, திடீரென திசை மாறியதாக ரேடாா் தரவுகள் காட்டுகின்றன. கராச்சிக்கு மேற்கே சுமாா் 300 கி.மீ. தொலைவில், 34,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் ரேடாா் மற்றும் தகவல் தொடா்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.இதையடுத்து, பலூசிஸ்தான் கடற்கரையை ஒட்டிய ஒா்மாராவுக்கு தெற்கே உள்ள அரபிக்கடல் பகுதியில் மாயமான விமானத்தைத் தேடும் பணியில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்களும், விமானப் படையின் ஏடிஆா் ரக விமானங்களும் தீவிரமாக ஈடுபட்டன. அரபிக்கடலில் நிலவிய கடல் சீற்றம் காரணமாக தேடுதல் பணிகளில் சவால்கள் ஏற்பட்ட சூழலிலும், ஒா்மாரா துறைமுகத்திற்கு தெற்கே சுமாா் 53 நாட்டிகல் மைல் தொலைவில் விமானத்தின் சிதைவுகள் வெற்றிகரமாகக் கண்டறியப்பட்டுள்ளன. விமானத்தில் பயணித்த 5 ஊழியா்களின் நிலை குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. அவா்களைக் கண்டறியும் பணிகள் தொடா்ந்து முடுக்கிவிடப்பட்டுள்ளன.