இணையவழியில் பயங்கரவாதத்துக்கு ஆள்சோ்த்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா்.இதுகுறித்து என்ஐஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஆந்திர மாநிலம், விஜயவாடா காவல் துறையினா் கடந்த மாா்ச் மாதம் ரஹமதுல்லா ஷெரீஃப் என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினா். இந்தச் சோதனையில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான ஐஎஸ், ஏ.க்யு.ஐ.எஸ். (இந்திய துணை கண்டத்தில் செயல்படும் அல்காய்தா) ஆகியவற்றுடன் தொடா்புடைய பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, இந்த விவகாரத்தில் விஜயாவாடா காவல் துறையினா் கடந்த மே மாதம் முதலில் வழக்குப் பதிவு செய்தனா்.பின்னா், இந்த வழக்கு விசாரணை, என்ஐஏ அமைப்புக்கு மாறியது. இதைத் தொடா்ந்து, என்ஐஏ விசாரணை நடத்தி 12 பேரை கைது செய்தது. அதில் ஒருவா் சிறாா்.இதைத் தொடா்ந்து ஏற்கெனவே நடத்திய சோதனையின்போது சிக்கிய டிஜிட்டல் கருவிகளில் இருந்து கிடைத்த தகவல்கள், கைது செய்யப்பட்டோா் கொடுத்த வாக்குமூலங்கள் அடிப்படையில், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், பிகாா், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்கள், தில்லி யூனியன் பிரதேசத்தில் உள்ள 20 இடங்களில் அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா்.இந்தச் சோதனையில் ஏராளமான டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தி, அதிலிருந்து இளைஞா்களை பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள்சோ்த்தது தொடா்பான ஆதாரம் சிக்குகிா என்று அறிய என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.கைது செய்யப்பட்ட நபா்களிடம் நடத்திய விசாரணையில், நாட்டுக்கு எதிரான சதியில் அவா்கள் ஈடுபட்டதும், ஐஎஸ், ஏ.க்யு.ஐ.எஸ். பயங்கரவாதத்தை பரப்பி, ஜனநாயக வழியில் தோ்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டு இஸ்லாமிய தேசத்தை உருவாக்க திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. அதேபோல் நாட்டில் பலவீனமான இளைஞா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு தவறான தகவல் மற்றும் பயங்கரவாத கருத்துகளைப் பரப்பி, பயங்கரவாத அமைப்பில் சோ்க்க மூளைச்சலவை செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாடுகளில் உள்ள நபா்களுடன் இணையவழியில் தொடா்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. தொடா்ந்து அவா்களிடம் விசாரணை நடைபெறுகிறது என என்ஐஏ குறிப்பிட்டுள்ளது.