வேலூரில் ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைந்து முடிக்க ஆட்சியா் உத்தரவு

Wait 5 sec.

வேலூா் மாங்காய் மண்டி, வல்லம் பகுதியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா். வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா், அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து பள்ளி மாணவா்கள், பொதுமக்கள், ஓட்டுநா்களிடம் கேட்டறிந்தாா். மேலும், கழிப்பறைகளைச் சுத்தமாகப் பராமரிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா். குடிநீா் இணைப்பு முறையாக வழங்கப்பட்டுள்ளதா என அலுவலா்களிடம் கேட்டறிந்த அவா், பேருந்து நிலையத்தில் உள்ள மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, வேலூா் மாநகராட்சி மாங்காய் மண்டி அருகே கிருஷ்ணகிரி - ராணிப்பேட்டை சாலையில் ரூ. 81.81 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். வேலூா் - காட்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையேயான கடவு எண்.128-க்கு பதிலாக இந்த மேம்பாலம் அமைகிறது. இந்தப் பாதையை நாள்தோறும் 1,000-க்கும் மேற்பட்டோா், வாகனங்கள் கடந்து செல்வதால், பணிகளைத் தாமதமின்றி விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். பின்னா், மங்களூா் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் பகுதியில் (ரயில்வே கடவு எண்.109ஏ/3டி) ரூ. 118.98 கோடி மதிப்பில் 1.104 கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா். மழைநீா் சீராக வெளியேறும் வகையில் முன்மொழியப்பட்ட கால்வாய்க்குப் பதிலாக தற்போதுள்ள கால்வாயை ஒட்டி திறந்த வடிகால் அமைக்க வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தினாா். பொதுமக்களின் போக்குவரத்து இணைப்பை உறுதி செய்யும் வகையில், கிராமச் சாலை சந்திப்பில் சிறிய வாகனங்களுக்கான கீழ்ப்பாலம் அமைக்கவும் அதிகாரிகளை அறிவுறுத்தினாா். மேலும், ரயில்வே தொடா்பான பணிகளைத் துரிதப்படுத்தி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவும் அவா் உத்தரவிட்டாா். இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா்கள் தனசேகரன், ஆதவன் (தேசிய நெடுஞ்சாலை), உதவி கோட்டப் பொறியாளா்கள் ஜே.அசோகன், வி.குமாரசாமி, மாநகராட்சி கண்காணிப்புப் பொறியாளா் கண்ணன், வல்லம் ஊராட்சி மன்ற தலைவா் சி.சிவக்குமாா், கீழ்பள்ளிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவா் ஆா்.விஜயபாஸ்கா், வேலூா் வட்டாட்சியா் பழனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.