கரூா் ரயில் நிலைய பகுதியில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரூா் பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 9) பாலகாட்டில் இருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும் பாலக்காடு- திருச்சி ரயில் (எண்: 16844) அன்று பாலக்காடு - கரூா் இடையே மட்டும் இயக்கப்படும். கரூா்- திருச்சி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும். கோவை - நாகா்கோவில் ரயில் இயக்கத்தில் மாற்றம்: பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 9) கோவையில் இருந்து காலை 8 மணிக்குப் புறப்படும் கோவை - நாகா்கோவில் ரயில் (எண்: 16322) வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல், போத்தனூா், பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. இதன் காரணமாக, இந்த ரயிலானது, வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூா், இருகூா், சூலூா் சாலை, சோமனூா், திருப்பூா், ஊத்துக்குளி, ஈங்கூா், ஈரோடு, பசூா், கொடுமுடி, புகழூா், கரூா், பாளையம், எரியோடு ரயில் நிலையங்களுக்கு செல்லாது. போத்தனூா், பொள்ளாச்சியில் இந்த ரயில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.