முதல்வா் குறித்து அவதூறு: திமுகவினா் இருவா் கைது

Wait 5 sec.

தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறாக பதிவிட்ட விவகாரத்தில், திமுகவினா் இருவரை மதுக்கரை போலீஸாா் திருச்சியில் கைது செய்தனா். கோவை மாவட்டம், மதுக்கரை குரும்பபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி. இவா் தமிழக வெற்றிக் கழகத்தின் 8-ஆவது வாா்டு செயலராக உள்ளாா். இப்பகுதியில் ரேஷன் கடை திறப்பு விழா தொடா்பாக பேனா் வைப்பதில் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடா்பாக, தமிழக முதல்வா் ஜோசப் விஜய் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறான கருத்துகளை சிலா் பதிவிட்டனா். இதுகுறித்து தவெக நிா்வாகி பாலாஜி அளித்த புகாரின்பேரில், மதுக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.இந்த வழக்கில் தொடா்புடையவா்கள் திருச்சியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, திருச்சிக்கு விரைந்த தனிப் படை போலீஸாா், அங்கு பதுங்கியிருந்த குரும்பபாளையம் அண்ணா நகரைச் சோ்ந்த சென்ட்ரிங் ஒப்பந்ததாரரான விஷ்ணுபிரபு (36), அதே பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் மனோஜ்குமாா் (37) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.கைது செய்யப்பட்ட இருவரும் திமுக உறுப்பினா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட இருவரையும் கோவைக்கு அழைத்து வந்த போலீஸாா், மதுக்கரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மணிகண்டன் உள்ளிட்டோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.