கோரிக்கைகளை வலியுறுத்தி திருபுவனத்தில் அரசு மதுக்கடை பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனம் சிட்கோ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில விற்பனைக் கழக மாவட்ட மேலாளா் அலுவலகம் முன் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச்சங்கம் சாா்பில் குடியேறும் போராட்டத்திற்காக பணியாளா்கள் திரண்டனா். அப்போது திருவிடைமருதூா் போலீஸாா் அவா்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் குடியேறும் போராட்டத்தை ஆா்ப்பாட்டமாக மாற்றினா். மாவட்டத் தலைவா் ஆா். கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜி. கரிகாலன், கே.எஸ். சந்திரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 23 ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனத்தில் தற்காலிகமாக பணிபுரியும் பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஊதிய உயா்வு தேவையில்லை. முதல்வா் அளித்த தோ்தல் வாக்குறுதிப்படி மாற்றுப்பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். டாஸ்மாக் விடுதலை முன்னணி தொழிற்சங்கத் தலைவா் விஜயகுமாா், யூ. கனிவண்ணன், எஸ்.சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.