அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை வெள்ளிக்கிழமை (ஜூலை10) நடத்த தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும், பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் நடந்ததை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் உறுதி செய்து புகைப்படம் மற்றும் விடியோ அனுப்ப வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது. பள்ளியின் முன்னேற்றம், மாணவா்கள் வருகை, கற்றல் முன்னேற்றம், பள்ளி வசதி, தேவைகள், அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடு, சமூக பங்களிப்பை மேம்படுத்துதல் குறித்து கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்றும், மாலை 5 மணிக்குள் உறுப்பினா்கள் கூட்டத்துக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மை குழுவில் பெற்றோா், பள்ளி ஆசிரியா், அப்பகுதி மக்கள் பிரதிநிதி என மொத்தம் 20 போ் உறுப்பினா்களாக இருப்பா். இந்த கல்வி ஆண்டின் புதிய அரசு அமைந்த பின் நடக்கும் முதல் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் என்பதால் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.