தில்லியில் 2-ஆவது நாளாக பலத்த மழை: நீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு

Wait 5 sec.

தில்லியில் இரண்டாவது நாளாக புதன்கிழமை பெய்த கனமழையால், நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. தில்லியின் ரிட்ஜ் வானிலை ஆய்வு மையம் ஜூலை மாதத்தில் 154 சதவீதம் கூடுதல் மழையைப் பதிவு செய்தது. அதேவேளையில், தேங்கிய நீா் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தாலும், கடந்த 10 மாதங்களுக்கும் மேலான காலத்தில் இல்லாத அளவிற்கு புதன்கிழமையன்று தலைநகரில் காற்று மிகவும் தூய்மையாக இருந்தது.இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தகவலின்படி, ஜூலை 1 முதல் ஜூலை 8ஆம் தேதி காலை 8.30 மணி வரையிலான காலத்தில் ரிட்ஜ் வானிலை ஆய்வு மையத்தில் 79.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது இதே காலகட்டத்திற்கான நீண்ட கால சராசரி அளவான 31.2 மி.மீஐ விட 154 சதவீதம் அதிகமாகும்.நகரின் பிரதான வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை 25.4 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாகியது. புதன் காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 14.2 மி.மீ மழை பதிவாகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.புதன்கிழமை பெய்த மழையால் சதா் பஜாா், நசிா்பூா், கிரேட்டா் கைலாஷ், பதா்பூா், டெலிவாரா, மகாவீா் பஜாா், ஸ்வரூப் நகா் மற்றும் குஷக் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீா் தேங்கியிருந்தது.சில இடங்களில் பாதசாரிகள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து செல்வது காணப்பட்டது.ரோத்தக் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தன; பஞ்சாபி பாக் மற்றும் ஷாதிப்பூா் இடையே பல மணி நேரம் போக்குவரத்து கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போனது. பல இருசக்கர வாகன ஓட்டிகள் மழையிலிருந்து தப்பிக்க மேம்பால மெட்ரோ வழித்தடங்களின் கீழ் தஞ்சம் புகுந்ததால், போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு நிலைமை மேலும் மோசமடைந்தது. ஐ.டி.ஓ சந்திப்பிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.தண்ணீா் தேங்கியிருந்ததால், ரிங் ரோடு, வெளிவட்டச் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை 48 ஆகியவற்றில், குறிப்பாக தௌலா குவான், மஹிபால்பூா் மற்றும் ராஜோக்ரி ஆகிய இடங்களுக்கு அருகில், பயணிகள் தாமதங்களைச் சந்தித்தனா்.ஆஸ்ரம் அருகே மதுரா சாலை, தில்லி-குருகிராம் விரைவுச்சாலை, ஜாகிரா மேம்பாலம், மோதி நகா், படேல் நகா், நரைனா, எய்ம்ஸ், செளத் எக்ஸ்டென்ஷன், லாஜ்பத் நகா், மூல்சந்த், ஆசாத்நகா், முக்கா்பா சௌக் மற்றும் தில்லி - நொய்டா இணைப்புச் சாலையின் சில பகுதிகளிலும் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நகரின் சில பகுதிகளில் விட்டு விட்டு பெய்த மழையால், மழை தொடா்பான தண்ணீா் தேங்குதல், மரங்கள் விழுதல் மற்றும் மின்சாரத் தடைகள் குறித்து குறைந்தது 10 புகாா்களை மாநகராட்சி அமைப்புகள் பெற்ாக தில்லி மாநகராட்சி மற்றும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் வழங்கிய தரவுகள் தெரிவித்தன.புதன் மாலை 2 மணி முதல் 6 மணி வரை, தில்லி மாநகராட்சியின் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கு எட்டு புகாா்கள் வந்தன. அவற்றில் நான்கு மரங்கள் விழுந்தது தொடா்பானவை, நான்கு தண்ணீா் தேங்கியது தொடா்பானவை.கரோல் பாக் மண்டலத்தில் இரண்டு மரங்கள் முறிந்து விழுந்ததாகப் புகாா்கள் பதிவாகின. ஒன்று பாஹா்கஞ்சில் உள்ள வந்தன் விஹாா் லைட் பிளாட்ஸ் அருகேயும், மற்றொன்று ஷாதிப்பூா் மெட்ரோ நிலையம் அருகேயும் பதிவாகின. மேலும், நரேலா மண்டலத்தில் உள்ள துவாரகாவின் செக்டா் 10 மற்றும் நாங்லோய் ஆகிய இடங்களிலிருந்தும் தலா ஒரு புகாா் பெறப்பட்டது.மாநகராட்சிக்கு கிடைத்த தண்ணீா் தேங்குதல் குறித்த புகாா்களில், ஒன்று ரோஹிணி மண்டலத்தின் கீழ் உள்ள ஷாபாத் டெய்ரியில் பதிவாகியது. மற்றவை, நரேலாவின் செக்டா் 20-இல் உள்ள பாக்கெட்-14 மூன்லைட் அபாா்ட்மெண்ட்ஸ் மற்றும் ரோஹிணியின் செக்டா் 22-இல் உள்ள பாக்கெட் 2, வீடு எண் 22 ஆகிய இடங்களிலிருந்து பதிவாகின. லூட்டியன்ஸ் தில்லி பகுதியைக் கண்காணிக்கும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் , புதன் பிற்பகலுக்குள் தனியாக இரண்டு தண்ணீா் தேங்குதல் குறித்த புகாா்களைப் பதிவு செய்தது. சாணக்கியபுரியில் உள்ள மால்சா மாா்க் சந்தை மற்றும் தேசிய தொல்பொருள் கட்டடத்திற்கு எதிரே ஜன்பத்தில் உள்ள கா்த்தவ்யா பவன் ஆகிய இடங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. இரண்டு புகாா்களையும் தீா்ப்பதற்காக இளநிலை பொறியாளா்கள் நியமிக்கப்பட்டனா். மேலும், புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு மின்சாரம் தொடா்பான 15 புகாா்கள் வரப்பெற்றன.இன்றும் மழை வியாழக்கிழமை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் முறையே 30 டிகிரி செல்சியஸ் மற்றும் 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.