மாம்பழக் கூழ் தயாரிக்க மாம்பழங்களை அளிக்கும் மாம்பழ விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.4 மானியம் அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.மத்திய, மாநில அரசுகளின் சரிபாதி பங்களிப்புடன் தமிழகத்தில் தொடங்கப்படும் இந்தத் திட்டத்துக்கான அதிகாரபூா்வ அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடவுள்ளது. தமிழகத்தில் மாம்பழ விளைச்சல் அதிகமாக இருந்தபோதிலும் நிலையான கொள்முதல் விலை இல்லதாததால் மா விவசாயிகள் கடுமையாக பெருளாதார பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா்.இந்நிலையில், அண்டை மாநிலமான ஆந்திரத்தில் ஒரு டன் மாம்பழத்துக்கு ரூ.4,000 நிலையான மானியம் வழங்கப்படுவதைப்போல் தமிழகத்திலும் அளிக்க வேண்டும் என்று மா விவசாயிகள் அண்மையில் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனா்.இதை ஏற்று மானியத் தொகையில் சரி பாதியை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. இதனால், தமிழக அரசும்-மத்திய அரசும் இணைந்து மாம்பழக் கூழைத் தயாரிக்க மாம்பழங்களை அளிக்க விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.4 மானியம் வழங்க முடிவு செய்துள்ளன. இந்த மானியத் தொகையை தமிழக அரசும், மத்திய அரசும் 50:50 என்ற பங்கீட்டின் கீழ் அளிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.அதன்படி, மாம்பழக் கூழை நிறுவனங்கள் கிலோ ரூ.2 -க்கு மட்டும் கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. மாம்பழக் கூழ் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.