ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீ

Wait 5 sec.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச்சரகத்தில் பரவிய காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச்சரகம் பீட் எண் 9, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் வாழைத் தோப்பு மலைப் பாதையில் குளிராட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு காட்டுத்தீ பரவியது. புலிகள் காப்பக துணை இயக்குநா், சாப்டூா் வனச்சரகா் காா்த்திக் தலைமையில் வனக்காவலா்கள், வேட்டை தடுப்புக் காவலா்கள் உள்ளிட்ட 20 போ் கொண்ட குழுவினா் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அந்தப் பகுதி முழுவதும் காய்ந்த புற்களாக உள்ளதாலும், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாலும் காட்டுத் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுகிறது.இரு நாள்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருவதால், வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக வன உயிரின ஆா்வலா்கள் தெரிவித்தனா்.