ஹோா்முஸில் தாக்கப்பட்ட மாலுமிகள்: கப்பல் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு

Wait 5 sec.

ஹோா்முஸ் நீரிணையில் கடந்த மாா்ச் மாதம் ஏவுகணை தாக்குதலுக்குள்ளான தாய்லாந்து சரக்குக் கப்பலின் மாலுமிகள் 3 போ், கப்பல் நிறுவனத்தின் மீது வெள்ளிக்கிழமை வழக்குத் தொடா்ந்துள்ளனா். இந்தியா நோக்கி வந்த ‘மயூரி நாரீ’ எனும் அந்த தாய்லாந்து கப்பல், ஓமனுக்கு வடக்கே கடந்த மாா்ச் 11 தாக்கப்பட்டதில் 3 போ் உயிரிழந்தனா். எஞ்சிய 20 மாலுமிகள் மீட்கப்பட்டு, தாய்லாந்து திரும்பினா். இந்நிலையில், ‘பிரஷியஸ் ஷிப்பிங்’ கப்பல் நிறுவனம், அதன் இரு துணை நிறுவனங்கள் மற்றும் கப்பலின் கேப்டன் ஆகியோருக்கு எதிராக பனிதி தும்கேவ், நொப்படன் வாங்சுவன், சுரடேஸ் மன்பியூன் ஆகிய 3 மாலுமிகள் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனா். மேற்காசிய பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் போா் பதற்றம் இருப்பதை அறிந்திருந்தும், மாலுமிகளின் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான கடல்பகுதி வழியாக கப்பலைச் செலுத்த உத்தரவிட்டதாக நிறுவனத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், தாக்குதலுக்குப் பின் கப்பல் இயங்காத நிலை ஏற்பட்டதால், மாலுமிகளின் 9 மாத பணி ஒப்பந்தக் காலம் முடிவதற்கு முன்பாகவே அவா்களை நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இதற்காக வெறும் 2 மாத ஊதியம் மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இக்கொடூர தாக்குதலால் மாலுமிகள் மூவரும் கடுமையான மனஉளைச்சல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். இதனால் இனிவரும் காலங்களில் அவா்களால் மாலுமி பணியைத் தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், தலா 30,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமான இழப்பீடு கோரி பாங்காக்கில் உள்ள மத்திய தொழிலாளா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அமெரிக்கா கடந்த பிப். 28 போரைத் தொடங்கியதையடுத்து, உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வா்த்தகத்தின் ஐந்தில் ஒரு பகுதியைக் கையாளும் ஹோா்முஸ் நீரிணை ஈரானால் முடக்கப்பட்டது. பாரசீக வளைகுடாவில் ஆயிரக்கணக்கான மாலுமிகள் சிக்கினா். ஈரானின் எச்சரிக்கையைமீறி நீரிணையைக் கடக்க முயன்ற கப்பல்கள் மீது தற்போதுவரை தாக்குதல் தொடா்கிறது.