அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கொல்வதற்கு ஈரானிய அரசு திட்டமிட்டுள்ளதாக, இஸ்ரேலிய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் கடந்த பிப்.28 அன்று நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்குகள் நேற்றுடன் (ஜூலை 9) நிறைவடைந்தன. ஹோர்முஸ் நீரிணை அருகே வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அதிபர் டிரம்ப், கடந்த ஜூன் 17 அன்று அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார். இதனைத் தொடர்ந்து, ஈரானின் 80-க்கும் அதிகமான தளங்களைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருவதால், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களின் மீது ஈரானிய படைகள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன.அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் போர் தொடங்கக் கூடும் என சர்வதேச அளவில் அச்சம் நிலவி வரும் நிலையில், அதிபர் டிரம்ப்பை கொலை செய்வதற்கு சாத்தியமான திட்டங்கள் குறித்து உளவுத் துறையின் தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதாக, அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் புதிய சதித்திட்டம் குறித்து எச்சரிக்கையை இஸ்ரேல் விடுத்துள்ளதாகவும், இந்தத் தகவல் ஒரு குறிப்பிட்ட சதித்திட்டம் தொடர்பானதாகவும் இருந்தது எனவும் செய்திகளில் கூறப்பட்டுள்ளன. ஏற்கெனவே, அதிபர் டிரம்ப்பின் முந்தைய ஆட்சியில் கடந்த 2020 ஜனவரி மாதம் அமெரிக்க தாக்குதலில் ஈரானிய ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்ட டிரம்ப்பை பழித்தீர்ப்போம் என ஈரானிய அரசு தொடர்ந்து கூறி வந்தது.முன்னதாக, துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் பங்கேற்று பேசிய அதிபர் டிரம்ப் தன்னைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறினார். மேலும், துருக்கியில் இருந்து நாடு திரும்புகையில் கத்தார் பரிசளித்த சொகுசு விமானத்துக்குப் பதிலாகத் தனது அமெரிக்க ராணுவ விமானத்தில் அவர் பயணித்தது பெருமளவில் கவனம் ஈர்த்தது. ஆஸ்திரேலியா புறப்பட்ட பிரதமர் மோடி! போர் விமானங்கள் மூலம் வழியனுப்பிய இந்தோனேசியா! Israeli intelligence has reported that the Iranian government is plotting to assassinate U.S. President Donald Trump.