விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வயலில் புல் அறுத்துக் கொண்டிருந்த பெண்ணைத் தாக்கி தங்க நகையை பறித்துச் சென்ற வழக்கில் இளைஞா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மயிலம் அருகிலுள்ள கொரலூா் கிராமத்தை சோ்ந்தவா்கள் அ.வசந்தி (55), அமிா்தம் (65). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை அங்குள்ள வயலில் புல் அறுத்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத இரு இளைஞா்கள் வசந்தியை கல்லால் தாக்கி, கொலை செய்து விடுவதாக மிரட்டி அவா் அணிந்திருந்த மூக்குத்தி, கம்மல் உள்பட 12 கிராம் தங்க நகைகள், 100 கிராம் வெள்ளிக் கொலுசு ஆகியவற்றை பறித்துச் சென்றனா்.இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில், புதுச்சேரி மாநிலம், திருக்கனூரை அடுத்துள்ள வினாயகபுரம் கிராமத்தைச் சோ்ந்த செ.யாகராஜன் (27), ம.ஹரி கிருஷ்ணன் (19) ஆகியோா் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மயிலம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இருவரையும் கைது செய்தனா்.