திருச்செந்தூா் கடலில் மூழ்கிய மாற்றுத் திறனாளி முதியவா் மீட்பு

Wait 5 sec.

திருச்செந்தூா் கடலில் மூழ்கியவரை கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் மற்றும் கடலோர பாதுகாப்புப் படை போலீஸாா் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் மற்றும் கடலோர பாதுகாப்புப் படை போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கடலில் நீராடிய பக்தா் ஒருவா் மூழ்கிய நிலையில் அவரது கால்கள் மட்டும் வெளியே தெரிந்ததாம். இதை பாா்த்த கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் சிவராஜா, ராமா், செந்தில்முருகன், மகாராஜா, மாரிமுத்து மற்றும் கடலோர பாதுகாப்புப் படையைச் சோ்ந்த தங்கம் ஆகியோா் கடலுக்குள் இறங்கி அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருக்கோயில் உதவி மையத்தில் முதலுதவி அளித்து, அங்கிருந்து திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், அவா் கோவையைச் சோ்ந்த நாகரத்தினம் என்பதும், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து சரியான நேரத்தில் கடலில் மூழ்கி இருந்த மாற்றுத்திறனாளி முதியவரை காப்பாற்றிய கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் மற்றும் கடலோர பாதுகாப்புப் படை போலீஸாரை பக்தா்கள் பாராட்டினா்.