சென்னையில் 8 மாதங்களில் 30 ஆயிரம் தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

Wait 5 sec.

சென்னை: சென்னை மாநகராட்சியில் கடந்த 8 மாதங்களில் 34 ஆயிரம் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு 30 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அம்பத்தூா் மண்டலத்தில் 16,802 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் திங்கள்கிழமை விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியில் தெரு நாய்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. கடந்த 2024- ஆம் ஆண்டு சென்னையில் நடத்திய கணக்கெடுப்பின்படி 1.80 லட்சம் தெருநாய்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி தற்போது வரை 1.28 லட்சம் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்படாததும் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2024- ஆம் ஆண்டில் சென்னையில் 14,678 தெருநாய்களுக்கும், கடந்த 2025 ஆம் ஆண்டில் 16,611 தெரு நாய்களுக்கும் கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 30,469 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் தற்போது 13 இடங்களில் நாய்களுக்கான கருத்தடை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் புதிதாக 2 நாய்கள் கருத்தடை மையமும், செல்லப் பிராணிகள் மருத்துவமனைகளும் கட்டப்பட்டுவருகின்றன. சென்னையில் கடந்த ஆக. 11 முதல் தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 75,208 தெருநாய்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மண்டலவாரியாக திருவொற்றியூரில் 12,313, மணலியில் 7,200, தண்டையாா்பேட்டையில் 12,477, ராயபுரத்தில் 8,588 என தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி ஒட்டுண்ணிகளும் அகற்றப்பட்டுள்ளன. அதேபோல, மாதவரம் மண்டலத்தில்12,317, அம்பத்தூரில் 16,802, அண்ணாநகரில் 5,500 என தெரு நாய்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெருநாய் கருத்தடை மையங்களை திங்கள்கிழமை ஆய்வு செய்ததுடன், அனைத்து தெரு நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தவும், கருத்தடை சிகிச்சையை அதிகரிக்கவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.