தமிழகத்தில் கடந்த சில நாள்களாக தொடர் மின்வெட்டாலும் பல மணி நேரம் மின்வெட்டு நீடிப்பதாலும் எப்போது மீண்டும் மின்சாரம் கிடைக்கும் என்பது தெரியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டு பிரச்னை இருந்து வருகிறது. அதிலும் கடந்த சில நாள்களாகவே தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் மின்வெட்டு இருப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் 10 மணிக்கு மேலாக மணிக்கணக்கில் மின்வெட்டு இருப்பதாகவும் இதனால் தூக்கமின்றி அவதிப்படுவதாகவும் மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சமூக ஊடகங்களிலும் மின்வெட்டு குறித்த மக்களின் கருத்துகளைப் பார்க்க முடிகிறது. மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் இதுபற்றி, காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் இரண்டு நாள்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது என்றும் இது பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு, தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்று கூறினார். எனினும் தொடர்ந்து தமிழகத்தில் மின்வெட்டு இருந்துகொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பின்போது மின்வெட்டு ஏற்பட்டதும், சிபிஎம் மாநிலச் செயலர் பெ. சண்முகம் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது மின்வெட்டு ஏற்பட்டதும் அதிகம் பேசப்பட்டது. நெல்லை மக்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்நெல்லை விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மின்வெட்டால் மக்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தியது கவனிக்கத்தக்கது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது ஒரு பிரச்னை என்றால், எப்போது மீண்டும் மின்சாரம் கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அந்தந்த பகுதி மின்வாரியத்திற்கு போன் செய்தால் பெரும்பாலான இடங்களில் யாரும் பதிலளிப்பது இல்லை. மின்தடை குறித்து கேரள மக்களுக்கு வரும் குறுஞ்செய்தி...இதுவே, கேரளத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதற்கு முன்னதாகவே (ஓரிரு மணி நேரம்) மின் இணைப்பு வைத்திருப்பவர்களின் செல்போனுக்கு 'குறுஞ்செய்தி' (எஸ்எம்எஸ்) வந்துவிடுகிறது. 'இந்த தேதியில் இந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை மின் இணைப்பு இருக்காது' என்று செய்தி வருகிறது. ஒரு மணி நேரம் மின்தடை என்றாலும் குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள். ஒருவேளை மின்தடையை ரத்து செய்தாலும் அதற்கும் செய்தி வருகிறது. இதனால் மக்கள் திட்டமிட்டுக்கொள்ள முடிகிறது. வீட்டில் உள்ள மின் சாதனைகளையும் பாதுகாக்க முடிகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மாதாந்திர பராமரிப்புக்காக 'ஒருநாள் முழுக்க மின்தடை' என்றால் மட்டுமே மின் இணைப்பு யார் பெயரில் இருக்கிறதோ, அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. ஒரு சில மணி நேரம் மின்தடை என்றால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் அதுவும் ஒரு சில பகுதிகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே 'மெசேஜ்' வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், மின்தடை ஏற்படும் அனைத்து நேரங்களிலும் மெசேஜ் வருவதில்லை என்றே கூறுகிறார்கள். சென்னையில் ஒரு சிலருக்கு வரும் குறுஞ்செய்தி...தமிழகத்தில் கடந்த சில நாள்களாக அடிக்கடி, ஏன் ஒரு நாளுக்கு 2, 3 முறைகூட மின்வெட்டு ஏற்படுகிறது. சில நேரங்களில் மின்வெட்டு என்பது, பல மணி நேரம்கூட நீடிக்கிறது. தொடர் மின்வெட்டால் பல பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், 'எந்தெந்த பகுதிகளில் என்ன காரணத்திற்காக மின்தடை' என்று பதிவிடுகிறார்கள். ஆனால் அனைத்துப் பகுதிகளுக்கும் அங்கே பதிவிடுவதில்லை. எப்போது மீண்டும் மின்சாரம் வழங்கப்படும் என்ற தகவலும் இல்லை. தொடர் மின்வெட்டாலும் எப்போது மீண்டும் மின்சாரம் கிடைக்கும் என்று தெரியாமலும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். இனிமேலாவது, தமிழகத்தில் மின்தடை ஏற்பட்டால் தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளில் உள்ள மக்களுக்கும் 'குறுஞ்செய்தி' மூலமாக 'முன்கூட்டியே' தகவல் தெரிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர சூழ்நிலை காரணமாக மின்தடை ஏற்பட்டால்கூட 'எப்போது மீண்டும் திரும்ப கிடைக்கும்?' என்று செய்தி அனுப்பலாம். அதற்கேற்ப மக்கள், மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்வார்கள். இதனால் மக்கள் மின்வாரியத்தைத் தொடர்புகொள்வதும் தவிர்க்கப்படும். மின்தடை அடிக்கடி ஏற்படுவதனால் மின் சாதனங்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்து வரும் நிலையில், மின்வெட்டு குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும், வீட்டில் உள்ள பொருள்களையாவது பாதுகாத்துக்கொள்ள முடியும்! Powercut: will advance notice be provided in Tamil Nadu like Keralaமின்வெட்டு இருப்பது உண்மை! அரசின் கவனம் தேவை! திருமா பேட்டி | DMK | VCK | TVK