சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று இரவு முழுவதும் கொட்டிய கனமழை காரணமாக மலைப்பாதையில் 2 இடங்களில் சிறிய அளவிலான நிலச்சரிவு ஏறப்ட்டுள்ளது.சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாள்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதை தொடர்ந்து நேற்று இரவு 9 மணிக்கு ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் பலத்த மழை பெய்ய தொடங்கி இரவு முழுவதும் பெய்தது.நேற்று இரவு பெய்த பலத்த மழையால் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 13 மற்றும் 14 வது கொண்டை ஊசி வளைவிற்கு இடையில் சாலையோரத்தில் லேசான நிலச்சரிவு ஏற்பட்டு சிறிய மரம் மற்றும் மண் சாலையின் குறுக்கே விழுந்ததுதகவலறிந்த ஏற்காடு நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் விழுந்த மரம் மற்றும் கல் மண்ணை அப்புறப்படுத்தினர். இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் மலைப்பாதையில் உள்ள 40 அடி பாலம் அருகில் பாறை உருளும் பகுதி என்று நெடுஞ்சாலை துறையினரால் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் 50 அடி உயரத்தில் இருந்து ராட்சத பாறை ஒன்றும் அதனுடன் சில சிறிய பாறைகளும் சரிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அந்த வேளையில் சாலையில் வாகனப் போக்குவரத்து இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் சாலையின் குறுக்கே விழுந்த பாறையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பாறை பெரிய அளவில் இருந்ததால் பாறையை சாலையில் இருந்து அப்புறப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சாலையின் குறுக்கே விழுந்த பாறையை சிறிது சிறிதாக நகர்த்தி சாலையோரத்தில் இருந்த வனப்பகுதியில் தள்ளி விட்டு அப்புறப்படுத்தினர். பாறையை அப்புறப்படுத்துவதில் தொய்வு ஏற்பட்ட சமயத்தில் மலைப்பாதையில் வாகன போக்குவரத்து குறைவாக இருந்ததால் சாலையில் அவ்வபோது லேசான போக்குவரத்து நெரிசல் மட்டும் ஏற்பட்டது.