மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் நேரடியாகவும் மதுரை மாநகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்த திரைகள் வாயிலாகவும் கண்டு பக்திப் பரவசம் அடைந்தனர்.இன்று அதிகாலை 5.30 மணியளவில் 12-ஆம் கால யாக பூஜையின் நிறைவில் மகா தீபாரதனை நடைபெற்றது. இதையடுத்து, அதிகாலை 5.45 மணிக்கு கடங்கள் புறப்பாடும், அதன் நிறைவில், வேத மந்திரங்களும், மேளதாள வாத்தியங்களும் முழங்க காலை 7.40 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு மகா குடமுழுக்கு நடைபெற்றது.காலை 7.55 மணிக்கு மூலவா் மீனாட்சி அம்மன் சந்நிதிக்கும், காலை 8.10 மணிக்கு மூலவா் சுந்தரேசுவரா் சந்நிதிக்கும் மகா குடமுழுக்கு இனிதே நடந்தது.தொடர்ந்த, இன்று மாலை 4 மணிக்கு மூலவருக்கு மகா அபிஷேகமும், தீபாரதனையும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறும். இதில் திராளன பக்தர்கள் பங்கேற்கிறார்கள்.அன்னதானம்!கோயில் நிர்வாகம் சார்பில், குடமுழுக்கு விழாவில் பங்கேற்கும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மிகச் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அருகே உள்ள சேதுபதி பள்ளியில், காலை மற்றும் மதியம் என இரு வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.காலையில் குடமுழுக்கு இனிதே நிறைவடைந்ததும், இனிப்புடன் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, காலையில் கேசரி, வெண்பொங்கல், இட்லி, சாம்பார், வடை ஆகியவை பாக்குமட்டை தட்டுகளில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு, மேஜை மீது தட்டுகளை வைத்து நின்றுகொண்டு சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலையில் சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் அன்னதானம் பெற்றுள்ளனர்.அதன்படி, இன்று மதியம் அதே பள்ளியில், பக்தர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, தயிர் சாதம், தக்காளி சாதம் உள்ளிட்டவை பாக்குமட்டை தட்டுகளில் வழங்கப்பட்டது. எந்த தள்ளுமுள்ளும் இன்றி, வரிசையில் பக்தர்கள் வந்துகொண்டேயிருக்க, அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பக்தர்களுக்கு இன்று அன்னதானம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.