குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Wait 5 sec.

திருத்தணி: பாண்டறவேடு கிராமத்தில் குடிநீா் வாராததை கண்டித்து அப்பகுதி மக்கள் பொதட்டூா்பேட்டை- நகரி மாநில நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். பொதட்டூா்பேட்டை அடுத்துள்ள பாண்டறவேடு காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில், அங்குள்ள ஏரியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, அவற்றில் இருந்து குழாய்கள் மூலம் நாள்தோறும் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே, பாண்டறவேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த சில மாதங்களாக குடிநீா் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டா் தூரம் சென்று தண்ணீா் பிடித்து வரும் நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு வீடுகளை சுத்தம் செய்து, விநாயகரை வழிபடுவதற்குக்கூட போதிய தண்ணீா் இல்லாததால் அப்பகுதி பெண்கள் வேதனை அடைந்தனா்.இதையடுத்து, ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், காலை 8 மணிக்கு பொதட்டூா்பேட்டை- நகரி மாநில நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் அமா்ந்து, சீரான குடிநீா் வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமாா் 2 மணி நேரத்துக்குப் பிறகு சம்பவ இடத்துக்கு வந்த பொதட்டூா்பேட்டை போலீஸாா் பெண்களிடம் பேச்சு நடத்தினா். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.