ஐஐடி மும்பையில் தொடரும் சோகம்: 7 மாதங்களில் 3-வது தற்கொலை!

Wait 5 sec.

மும்பை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் பயிலும் 22 வயது மாணவர் தேர்வின்போது சாட் ஜிபிடி பயன்படுத்திப் பிடிபட்ட நிலையில் தனது விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். மகாராஷ்டிரத்தின் யவத்மால் மாவட்டத்தைச் சேர்ந்த சாஹில் ரவீந்திர வகோடே என்ற மாணவர் மும்பை ஐஐடியில் பி.டெக் - எனர்ஜி அண்ட் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். மும்பை ஐஐடி நிர்வாகத்தின் அறிக்கையின்படி, தேர்வு நேரத்தில் பதில்களைப் பெறுவதற்காக அந்த மாணவர் தேர்வு வினாத்தாளை சாட் ஜிடிபியில் பதிவேற்றியதாகக் கல்வி நிறுவனம் தெரிவித்தது. ஆனால், கல்வி நிறுவனம் அவர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாடம் நடத்திய ஆசிரியரும் துறைத் தலைவரும் அந்த மாணவரிடம் இது குறித்துப் பேசி அவருக்கு ஆலோசனை வழங்கியதோடு, இந்தச் சம்பவம் அவரது கல்வி வாழ்க்கையைப் பாதிக்காது என்றும் உறுதியளித்தனர்.அதன்பிறகு அவர் தனது விடுதி அறைக்குத் திரும்பினார். பின்னர் மாலையில் அவர் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. இந்தத் துயரச் சம்பவத்தால் சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இறப்பு தொடர்பான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் இரண்டாமாண்டு பயிலும் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அதேபோன்று கடந்த ஜூலையில் 20 வயதான இரண்டாம் ஆண்டு பி.டெக் மாணவர் ஒருவரும் தற்கொலை செய்துள்ளார். போவாயில் உள்ள ஐஐடி மும்பை வளாகத்தில் கடந்த ஏழு மாதங்களில் பதிவான மூன்றாவது தற்கொலைச் சம்பவம் இதுவாகும். தற்கொலை குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.