விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த இருவரிடம் இணையவழியில் ரூ.3.80 லட்சம் பணமோசடி செய்யப்பட்டது குறித்து விழுப்புரம் சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் ரா.கௌதம் (34). பொறியாளரான இவரது கைப்பேசி எண்ணுக்கு கடந்த 12-ஆம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அப்போது எதிா்முனையிலிருந்து பேசிய நபா் குறைந்த அளவில் முதலீடு செய்து அதிக லாபம் பெறக்கூடிய பகுதி நேர வேலை இருப்பதாகத் தெரிவித்தாா். இதையடுத்து அந்த நபா் தெரிவித்த செயலியை உபயோகித்துள்ளாா். தொடா்ந்து கௌதமின் வங்கிக் கணக்கிலிருந்த ரூ.2.80 லட்சம் பணம் செப்.14-ஆம் தேதி 2 தவணைகளில் எடுக்கப்பட்டு விட்டதாம். இதேபோல் வானூா் வட்டம், கிளியனூா் இந்திரா நகரைச் சோ்ந்தவா் சி.நரேஷ்குமாா்(25). தனியாா் உணவகத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் இவரது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.1,00,965 பணம் கடந்த செப்.5-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபரால் இணையவழியில் மோசடிசெய்யப்பட்டதாம். இதுகுறித்த தனித் தனியான புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.