சென்னையிலிருந்து வார இறுதியில் 2,500-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியிருக்கிறது.வார இறுதி நாள்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 2,500-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செப்டம்பர் 18-ஆம் தேதி 760 பேருந்துகளும், 19-ஆம் தேதி 620 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, தேவைக்கேற்ப 805 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.ஏற்கனவே வெள்ளிக்கிழமை 7,912 பேரும், சனிக்கிழமை 4,001 பேரும், ஞாயிற்றுக்கிழமை 8,946 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்க பயணிகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்குமாறு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.சிறப்புப் பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.