மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, கோவிலில் உள்ள 12 கோபுரங்களிலும் சுமார் ஐந்து டன் எடையிலான வண்ண மலர் மாலைகள் சாற்றும் பணி நடைபெற்றது.அன்னை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் தங்க கோபுரங்கள் உள்ளிட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ராஜகோபுரங்கள் என 12 கோபுரங்களுக்கும் சாற்றுவதற்கான மலர் மாலைகள் கடந்த இரண்டு நாட்களாக புதுமண்டபம் பகுதியில் தயாரிக்கப்பட்டு வந்தன. சுமார் 40 அடி முதல் 122 அடி நீளம் கொண்ட பிரமாண்ட மலர் மாலைகள் தயாரிக்கப்பட்டன.மாலைகளை கோபுரங்களின் உச்சிக்கு கொண்டு சென்று சாற்றுவதற்கான பணிகள் தொடங்குவதற்கு முன்பாக, அம்மன் சன்னதி வாசலில் உள்ள அஷ்டசக்தி மண்டபத்தில் அமைந்துள்ள வல்லப விநாயகருக்கு மலர் மாலை சாற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, வடக்கு கோபுரம் அருகே உள்ள ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயத்தில் குழுவினர் சுவாமி தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து கிழக்கு ராஜகோபுரத்தில் முதல் மலர் மாலையை கோபுரத்தின் உச்சியை நோக்கி ஏற்றும் பணி நடைபெற்றது. புதுமண்டபத்தில் இருந்து மலர் மாலைகள் கோபுரம் அமைந்துள்ள பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, ஒன்பது நிலைகளைக் கொண்ட கிழக்கு ராஜகோபுரத்தில் மாலை சாற்றும் பணியில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.தொடர்ந்து, கோவிலில் உள்ள 12 கோபுரங்களிலும் பிரம்மாண்ட வண்ண மலர் மாலைகள் சாற்றப்பட்டன.