கோவை: நடிகர் விஜய் சேதுபதிக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜாக்பாட் அடிக்கும் என்று நான் கூறினேன், தற்பொழுது அவருக்கு நேரம் சரியில்லை என்று எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் விஜய் சேதுபதி சொன்ன தனிப்பட்ட கருத்துகளை, தவெகவினர், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து சூசகமாகப் பேசியதாகக் கருதி, விஜய் சேதுபதிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் தீயாய் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.இதற்கிடையே, திமுகவினரும், நடுநிலையாளர்களும், நடிகர் விஜய் சேதுபதி சொன்னது, நிகழ்ச்சி தொடர்பான கருத்தே தவிர, அவர் முதல்வர் விஜய் குறித்துப் பேசியிருப்பதாக தவெகவினரே நினைத்துக்கொண்டு, இவ்வாறு எதிர்மறையாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்று கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.இந்த நிலையில்தான், எம்எல்ஏவும் ஜோதிடர் என அறியப்படுபவருமான கனிமொழி தெரிவித்திருக்கும் கருத்து மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.கோவை கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட செரையம்பாளையம் பகுதியில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து சேவையை எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் மீண்டும் துவக்கி வைத்தார். பின்னர் பேருந்தில் சிறிது தொலைவு பயணம் செய்து மக்கள் மத்தியிலும் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் கலந்துரையாடினார்.இந்த நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், கொரோனாவிற்கு முன்பு இப்பகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் துவக்கி வைத்துள்ளதாகவும் ஏன் சேவை நிறுத்தப்பட்டது என்பது குறித்து முந்தைய ஆட்சியாளர்களிடம்தான் கேட்க வேண்டும். அவர்கள் மக்களின் குறைகளை பார்க்கவில்லை. பாக்கெட்டுகளைதான் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்கள். ஆனால் நாங்கள் மக்கள் குறைகளைப் பார்த்து செயல்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.நாம் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு வசதிகளை செய்வதில்லை என்றும் எந்த மக்கள் தொகை இருந்தாலும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதாக தெரிவித்தார். நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்யை பற்றி விமர்சித்ததாக கருத்துகள் பரவி வருவது தொடர்பான கேள்விக்கு, அது ஒரு கேளிக்கை நிகழ்ச்சி, நடிகர் விஜய் சேதுபதி, மகாராஜா திரைப்படம் நடிப்பதற்கு முன்பு அவருடைய நிலை எவ்வாறு உள்ளது என்பதை கட்டங்கள் பார்த்து கூறி இருந்தேன். அப்பொழுது அவருக்கு ஜாக்பாட் அடிக்க போகிறது என்று கூறி இருந்தேன், பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஒரு ஜாக்பாட் ஆக இருந்தது. இந்த நூறு நாள்களில் சுமார் 80 கோடி வரை அவர் சம்பளம் வாங்குவார். எனவே சம்பளத்திற்காக அவர் பேசியிருக்கிறார் என்றார்.அந்த தொலைக்காட்சியிடம் கேட்கும்பொழுது முதல்வரை குறிப்பிட்டு அவர் அவ்வாறு பேசவில்லை என்று விளக்கம் கூறுகிறார்கள். ஆனால் ஓபனாக சொல்ல வேண்டும் என்றால் அது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலதான் என்று விமர்சித்தார். எங்களைப் பொறுத்தவரை அரசியல் விமர்சனம் யார் வேண்டுமானால் வைக்கலாம். ஆனால் பார்த்துப் பேச வேண்டும். அவர் பேசுவதால் இங்கு எந்த ஒரு விஷயமும் மாறப் போவது கிடையாது. எங்களுடைய தவெக அரசு வெளிப்படையாக என்னென்ன நடக்கிறது, அவர் என்ன செய்கிறார்? எங்கு செல்கிறார்? என்ன சாப்பிடுகிறார்? என்பது முதல் கொண்டு வெளிப்படையாக கூறுகிறோம். விஜய் சேதுபதிக்கு ஜாக்பாட் என்பது கண்டிப்பாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. மேலும் அவர் கண்டிப்பாக குறிப்பிட்ட கட்சியினரிடம் இருந்து காசு வாங்கிக்கொண்டு பேசுகிறார். எங்கள் தலைவரின் பெயரை குறிப்பிட்டு அவரைப் பேசச் சொல்லுங்கள். அதற்கு நாங்கள் பதில் கூறுகிறோம், மக்கள் பதில் கூறுவார்கள். என்னை பொருத்தவரை இதை இன்னைக்கு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர் அவருடைய பிழைப்பிற்காக செய்கிறார். சட்டப்பேரவை செல்லும் பொழுது யாரும் நாடகம் கூட பார்க்கவில்லை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சட்டப்பேரவையை நேரலையாக பார்க்கிறார்கள். விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை, இதோடு விட்டுவிட்டால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு பற்றி கேட்கிறீர்கள், தேர்தலுக்கு முன்பு கேட்டிருந்தால்கூட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை கூறி இருக்கலாம். எங்களுடைய ஆட்சியை தற்போது கண்கூடாக மக்கள் பார்த்து விட்டார்கள். மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை வந்து விட்டது. எனவே இடைத்தேர்தலில் எங்கள் தலைவர் யாரை நிற்க வைக்கிறாரோ அவர்தான் வெற்றியாளர் என்று தெரிவித்தார். Actor Vijay Sethupathi is going through a rough patch: MLA Kanimozhi's interview.