கணவர் கடன் பெற்றுவிட்டு உயிரிழந்த நிலையில், அவரது மனைவி அந்தக் கடனுக்கு பொறுப்பாக மாட்டார் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கணவர் இறந்த நிலையில், அவர் பெற்ற கடனுக்காக, மனைவியின் வைப்பு நிதிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட ரூ.19.90 லட்சத்தை வட்டியும் முதலுமாக, அவரது வங்கிக் கணக்கில் திரும்ப செலுத்துமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.கணவர் பெற்ற கடனுக்காக, மிக வெறுக்கத்தக்க வகையில், வங்கி நடைமுறை அமைந்திருப்பதகாவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.கடன் நிலுவைத் தொகைகள் வசூலிக்கப்பட்ட விதத்தை மேற்கோள் காட்டிய நீதிமன்றம், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, பாதிக்கப்பட்டவருக்கு பாரத ஸ்டேட் வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.நேஹா மிஸ்ரா என்பவர் தொடர்ந்த வழக்கில், லக்னெளவில் உள்ள மருத்துவமனையில் பேராசிரியராக இருந்த தன்னுடைய கணவர் 2021ஆம் ஆண்டு கரோனாவால் இறந்து விட்டார். அவர் பாரத ஸ்டேட் வங்கியில் 15 லட்சம் தனிநபர் கடன் பெற்றிருந்தார். கடன் பெறும்போது, அதற்கான காப்பீடு எடுக்கப்பட்டு ரூ.8,803 கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனிநபர் கடனைப் பெற தான் எந்த கையெழுத்தும் போடவில்லை. கடன் அளித்த வங்கிக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அப்படியிருக்க எனக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, தன்னுடைய சம்பளம் பெறம் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. தன்னுடைய நிலையான வைப்புக் கணக்கிலிருந்து ரூ.19.90 சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு கடன் தொகை கழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், நிலையான வைப்புத் தொகைக்கா வட்டியுடன், 19.90 லட்சத்தை வட்டியும் முதலுமாக நான்கு வாரத்தில், நேஹாவின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.