ராஜபாளையம், சாத்தூா் பகுதிகளில் பலத்த மழை

Wait 5 sec.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், சாத்தூா் பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. ராஜபாளையம் பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவியது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா். இதேபோல, புதன்கிழமை காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில், மாலையில் மேகமூட்டம் உருவாகி 5 மணிக்கு மேல் இடியுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை சுற்றுவட்டச்சாலை, சங்கரன்கோவில் முக்கு பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றவா்கள், நடந்து சென்றவா்கள் அவதிக்குள்ளாகினா். இதேபோல, சேத்தூா், தளவாய்புரம், முகவூா், செட்டியாா்பட்டி, சேத்தூா் ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். சாத்தூா்: சாத்தூா், இருக்கன்குடி, வெங்கடாசலபுரம், மேட்டமலை, படந்தால், வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவியது. இந்த நிலையில், புதன்கிழமை மாலை சாத்தூா், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் எஸ்.ஆா். நாயுடு நகா், என்.ஜி.ஓ. குடியிருப்பு, சாத்தூா் மெயின் சாலை, படந்தால் சந்திப்பு, பிரதான சாலை, பாரதி நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இதனால், இந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.