ச. நாகராஜன் மறதி நோய் என்பது வயதானவர்களுக்கு சாதாரணமாக வரும் நோய். மூளை திசுக்களின் ஒன்றுடன் ஒன்றான தொடர்பு பலவீனப்படுவதால் இது ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து அறிவியல் அறிஞர்கள் 39 ஆயிரம் பேரை தங்கள் ஆய்வுக்கு அண்மையில் உட்படுத்தினர்.மூளையின் வயதை ஒருவரின் நிஜ வயதுடன் ஒப்பிட்டுப் பார்க்க அவர்கள் முனைந்தனர். மூளை வயதுக்கும் நிஜ வயதுக்கும் இடையில் உள்ள இடைவெளி ப்ரெயின்கேப்' எனப்படும். இதை ஆராய்ந்தால் மறதி நோய் வருவதைச் சொல்லி விடலாம். வாழ்க்கை முறை மாற்றத்தால் இதைத் தவிர்க்கலாம் என்பதே நிபுணர்களின் கருத்து. புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும் நிறுத்துவது, உடற்பயிற்சியை அன்றாடம் மேற்கொள்வது போன்றவையெல்லாம் நிச்சயமாக மறதி நோய் வருவதை தாமதப்படுத்தும். புதிய மொழி கற்பதால் பயன் என்ன? அண்மையில் நடைபெற்ற விஞ்ஞானிகளின் மாநாடு அதிக மொழிகளைத் தெரிந்து கொள்வோர் இளமையான மூளையைக் கொண்டுள்ளனர் என்பதைத் தெரிவித்துள்ளது.இரண்டு மொழிகள் பேசுவோர் மூளை வயதாவதை ஆறு ஆண்டுகள் தாமதப்படுத்துகின்றனர் என்றும், நான்கு மொழிகளைஅறிந்திருப்போர் 13 ஆண்டுகள் மூளை வயதாவதைத் தாமதப்படுத்துகின்றனர் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 27 ஐரோப்பிய நாடுகளில் 86 ஆயிரம் பேரை ஆராய்ந்ததில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழியைப் பேசுவோர் மறதி நோய் வருவதை 30 சதவிகிதம் தவிர்க்கின்றனர் என்பது ஆய்வின் முடிவு.இதிலுள்ள உண்மை என்னவென்றால், ப்ரெயின்ரிசர்வ்' எனப்படும் நரம்புத் திசுக்களின் அதிகப்படியான தொடர்பு இந்த மறதி நோய் அபாயத்தைத் தடுக்கிறது என்பதேயாகும்.புதிய மொழி ஒன்று கற்பதால் சொல்வளத்தை அதிகப்படுத்துவதோடு பிரச்னைகளைத் தீர்க்கும் ஆற்றலையும் அதிகப்படுத்துகிறது. ஆனால் இது மறதி நோய் இருப்பதை காலதாமதமாகவே தெரியப்படுத்தும் என்று இவர்கள் தங்கள் கருத்தைச் சொல்கின்றனர். இவர்கள் எடுத்துக் காட்டுவது இந்தோனேஷியாவைத் தான். அங்கு 20 கோடி மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் இரண்டு மொழிகளுக்கும் மேலாக பல மொழிகளைப் பேசுபவர்கள். ஆனால் இங்குள்ள சில பகுதிகளில் மறதி நோய் அதிகமாக உள்ளது என்பதை இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ப்ரெய்ன்ரிஸர்வ்' கொள்கையை முன் வைப்பவர்கள் மூளை புதிய தொடர்புகளை செல்களில் பெறுவதால் வயதாகும்போது தனது திறமையைத் தக்க வைத்துக் கொள்கிறது என்றும், இது ரத்த ஓட்டத்தை அதிகமாக்குவதோடு ஆக்ஸிஜனையும் உணவுச்சத்துகளையும் மூளையின் தேவையான பகுதிகளுக்கு விநியோகிக்கிறது என்றும் கூறுகின்றனர்.பலமொழி வல்லுநர்கள்:கனடாவைச் சேர்ந்த பவல்அலெக்ஸாண்டர் ஜனுலுஸ் என்பவர் தான் பல்மொழிவித்தகர். 1939-ஆம் ஆண்டு பிறந்த இவர், 42 மொழிகளைக் கற்றவர். லைபீரியாவில் 1954-ஆம் ஆண்டில் பிறந்த ஜியாத்ஃபாஸா, 59 மொழிகள் அறிந்தவர். இப்போது பிரேசிலில் வாழும் இவர் பல்வேறு நேரடி நிகழ்ச்சிகளில் அந்தந்த மொழிகள் பேசுவோருடன் அதே மொழியில் பேசி அசத்தியவர். ஹாங்காங் ஆளுநராக 1854-ஆம் ஆண்டு முதல் 1859 வரையில் இருந்த சர்ஜான்பெளரிங் 200 மொழிகளை அறிந்தவர் என்றும், இவற்றில் நூறு மொழிகளில் இவர் பேசி இருக்கிறார் என்றும் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும் தாய்மொழியைத் தவிர இன்னும் ஒன்றோ அல்லது இரண்டோ எத்தனை மொழிகளைக் கற்றாலும் அது வரவேற்கத்தக்கது.