இன்று லண்டன் செல்லும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை வழியனுப்பச் செல்ல முடியவில்லையே என்ற ஏக்கம் மட்டுமே உள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார். முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று காலை கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் ரூ. 10,000 பிணைத்தொகை கட்ட வேண்டும் என்றும் ஆத்தூர் காவல் நிலையத்தில் 10 நாள்கள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை ஆத்தூர் காவல் நிலையம் வந்த அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், "நான் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளேன். 10 நாள்கள் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரேயொரு வருத்தம் என்னவென்றால், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் இன்று லண்டன் சென்றுள்ளார். அவரைச் சந்தித்து வழியனுப்ப முடியவில்லையே என்ற ஏக்கம்மட்டும் தான் உள்ளது. குதிரை பேரம் குறித்து எங்களுடைய தலைமையில் கேட்டு, வழக்கறிஞர்கள் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுப்பார்கள். பாஜகவைக் கண்டு அஞ்சுகிறார் முதல்வர் விஜய். திமுகவை அழித்துவிடலாம் என்று நினைக்கும் அவரது கனவு பலிக்காது" என்றார். மு.க. ஸ்டாலினின் பேரனும் உதயநிதியின் மகனுமான இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அனைவரும் லண்டன் செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. My only regret is not being able to go and see M.K. Stalin sentoff: Anitha Radhakrishnanகுடும்பத்துடன் லண்டன் புறப்பட்டார் மு.க. ஸ்டாலின்!