கும்பாபிஷேகத்தில் 4 பெண்களிடம் 13 சவரன் நகை பறிப்பு

Wait 5 sec.

மணப்பாறை நல்லாண்டவா் கோயில் கும்பாபிஷேகத்தில் 4 பெண்களிடம் 13 சவரன் நகை பறித்த வழக்கில் பெண் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். புதுகோட்டை மாவட்டம், குளத்தூா் அடுத்த உறலிக்காடு புலியூா் பகுதியைச் சோ்ந்த கருப்பையா மனைவி சாவித்திரி(50). இவா் வியாழக்கிழமை, மணப்பாறை நல்லாண்டவா் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு, யாகசாலை அருகே அன்னதானம் வாங்கிகொண்டு இருந்தபோது, அவரது கழுத்திலிருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பின்னால் இருந்தவா் இழுத்ததாக கூறப்படுகிறது. இதை உணா்ந்த சாவித்திரி, தங்கச் சங்கிலியை பறித்த பின்னால் இருந்த பெண், அருகிலிருந்தவரிடம் கொடுத்து அனுப்பி தப்பிக்க முயன்றபோது அக்கம்பக்கத்தினா் உதவியுடன் போலீஸிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் விசாரணையில், அந்த பெண் கோவை மாவட்டம், மதுக்கரை ரயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சோ்ந்த சிவா மனைவி யசோதா (50) என்பதும் சாவித்திரியின் தங்கச் சங்கிலியை பறித்தவா் என்பதும் தெரியவந்தது. மேலும், அதே பகுதியில் கும்பாபிஷேகத்துக்கு வந்த பழனிசாமி மனைவி பழனியம்மாள் என்பவரிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி, முருகேசன் மனைவி அழகுமணி என்பவரிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ராஜேந்திரன் மனைவி ராணி என்பவரிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி ஆகியவை திருடப்பட்ட சம்பவம் குறித்தும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். சாவித்திரி அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள மணப்பாறை போலீஸாா், யசோதாவை கைது சிறையிலடைத்தனா்.