வி.ஜி. சினி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் நா.வெங்கடேசன் தயாரித்து வரும் படம் 'விசாரணை கைதி'. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எஸ்.ஆர். மணிகண்டன். உன்னி கிருஷ்ணன், வைஷ்ணவி, கூல் சுரேஷ், விகடன், ரித்விகா ஸ்ரேயா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் குறித்து இயக்குநர் மணிகண்டன் பேசும்போது, 'ஒரு குற்றமும், அந்த குற்றத்தைச் செய்யத் தூண்டக்கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். குற்றம் என்பது நம்பிக்கை துரோகம். அந்தத் துரோகத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது; அதன் விளைவுகள் என்ன? என்பதுதான் இதன் பேசுபொருள். இரு மர்மக் கொலைகளின் பின்னணிதான் கதை. எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கிவிட முடியாது. இப்போதுள்ள வாழ்க்கை அனுதினமும் சவால்தான். அதுவும் ஆண், பெண் உறவுகளுக்குள் உள்ள சிக்கல்கள் ஏராளம். எண்ணங்கள் பொருந்திப் போனால்தான் எந்த விஷயமும் ஈடேறும். இது காதலுக்கு அப்படியே பொருந்தும். ஆனால், நாளடைவில் எல்லாவற்றிலும் சலிப்பு, பிரியமானவர்கள் மீது காட்டுகிற அன்பு அவர்களை சந்தோஷப்படுத்தவே இல்லை. என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொள்ளத்தான் என்ற நிலை உருவானால், அந்த வாழ்க்கை என்னவாகும். அப்படியோர் பாதையில்தான் இந்தக் கதை பயணமாகும்' என்றார்.