சட்டப்பேரவையில் முதல்வர் பதிலுரையில் பேசியதாவது, "குற்றத்தைப் பார்க்கும் பார்வையில் மாற்றம் வேண்டும். ஒரு குற்றம் நடைபெற்று விட்டது என்பதற்காக, ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று கூறிவிட முடியாது.தனிப்பட்ட குற்றச் சம்பவத்துக்கும் மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் - ஒழுங்கு நிலைக்கும் வேறுபாடு இருக்கிறது. ஒரு குற்றம் நடைபெற்று விட்டபிறகு, அதற்கான பொறுப்பை அரசு மீது சுமத்தி, மற்றவர்கள் ஒதுங்கிவிட முடியாது.ஏனெனில், அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாள்களில் தோன்றியதல்ல. ஒவ்வொரு குற்றத்துக்குப் பின்னாலும் ஒரு குடும்பப் பிரச்னை, சொத்துத் தகராறு, முன்விரோதம், பழிவாங்கும் மனநிலை, போதைப்பொருள் பயன்பாட்டின் தாக்கமாகவும் இருக்கலாம்.கடந்த காலங்களில் ஏற்பட்ட சட்டத்தின் மீது பயமில்லாதது, சிலரின் ஆதிக்கத்தின்கீழ் காவல்துறையின் செயல்பாடு, போதைக் கலாசார வளர்ச்சி போன்றவையும், சமூகக் கட்டுப்பாடு குறைதல், சாதிய அடையாளம், நிலம் மற்றும் அதிகாரத்தின் மீதான போட்டி, கலப்புத் திருமணத்துக்கு எதிர்ப்பு, உள்ளூர் அதிகாரப் போட்டி, அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கம், சமூக வலையமைப்புகளின் தாக்கம் போன்ற பல்வேறு சமூக காரணிகளும் குற்றங்களுக்குப் பின்னணியாக இருக்கலாம்.எனவேதான், 2026 ஜூலை 30-ல் நடைபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் காவல்துறையின் பணி என்பது குற்றவாளிகளைக் கைது செய்து விடுவதோடு முடிந்துவிடக் கூடாது. குற்றம் உருவாகும் சூழலைக் கண்டறிந்து, அந்தக் குற்றம் நடைபெறுவதற்கு முன்பே தடுப்பதை காவல்துறை இலக்காகக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.ஒவ்வொரு காவல் நிலையமும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு கிராமத்திலும் வார்டிலும் தெருவிலும் நிலவும் பிரச்னைகள் குறித்து காவல்துறையினர் முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.